ஆசிய கோப்பை 20 ஓவர் தொடரின் 6வது லீக் போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.
டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. பர்ஹான் 40 ரன்களும், ஷாஹீன் அப்ரிடி 33 ரன்களும் எடுத்தனர்.
இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா, அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்டியா, வருண் சக்ரவர்த்தி தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
பின், 128 ரன்கள் இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்தியா வேகமான தொடக்கம் கண்டது. அபிஷேக் சர்மா 13 பந்தில் 31 ரன்களும், திலக் வர்மா 31 ரன்களும் எடுத்தனர்.
கேப்டன் சூர்யகுமார் யாதவ் பொறுப்புடன் ஆடி 47 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், இந்திய அணி 15.5 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் எடுத்து, பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.


