இசைஞானி இளையராஜா திரை இசை உலகில் 50 ஆண்டுகளை கடந்ததையொட்டி, தமிழக அரசு சார்பில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது.
‘சிம்பொனி – சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா – பொன்விழா ஆண்டு 50’ என்ற தலைப்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “நான் இதிகாசங்களிலும் புராணங்களிலும் அதிசய மனிதர்களைப் பற்றி படித்திருக்கிறேன்.
ஆனால் என் கண்ணால் பார்த்த அதிசய மனிதர் இளையராஜாதான். எவ்வளவு இழப்புகளைச் சந்தித்தாலும் ராஜாவிடம் சலனம் இல்லை.
ராகங்களை அள்ளிக் கொடுப்பவர் ராஜா. அவரை நான் சாமி என்று அழைப்பேன். உலகெங்கும் வாழும் தமிழர்களின் நாடி, ரத்தம், உயிர் ராஜாதான். அவருடனான நட்பு எனக்கு பெரும் பாக்கியம்” என்று உருக்கமாக தெரிவித்தார்.
இந்த விழாவில், இளையராஜாவின் இசை பயணத்தை கொண்டாடும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.


