‘டிட்வா’ புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னையை நோக்கி நகர்ந்து வருவதால் நகர் முழுவதும் கனமழை பெய்துவருகிறது. சென்னையில் இடைவிடாது பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். தொடர் மழையால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
இந்நிலையில் சென்னையில் இருந்து 50 கி.மீ. தூரத்தில் ஒரே இடத்தில், பல மணி நேரமாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 12 மணி நேரத்தில் தென்மேற்கு திசையில் நகர்ந்து தாழ்வு மண்டலமாக வலுவிழக்க கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


