இஸ்ரேல் அதிகாரிகளால் தானும் மற்ற கைதிகளும் துன்புறுத்தப்பட்டதாக சமூக ஆர்வலர் கிரெட்டா தன்பர்க் குற்றம்சாட்டியுள்ளார்.
இஸ்ரேல் தாக்குதலால் உருக்குலைந்துள்ள காஸா மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கப்பலை ஃப்ரீடம் ஃப்ளோடிலா கூட்டமைப்பு அனுப்பியது.
இஸ்ரேல் இராணுவத்தினர் கப்பலை இடைமறித்து அதனை பறிமுதல் செய்து அதில் இருந்த கிரெட்டா தன்பர்க் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை கைது செய்தனர்.
இதன்பின்னர் கிரெட்டா தன்பர்க் உள்ளிட்டோர் நேற்று(7) விடுவிக்கப்பட்டனர்.
அப்போது கிரெட்டா உள்ளிட்டோரை இஸ்ரேல் அதிகாரிகள் துன்புறுத்தியதாகவும் தங்களை விலங்குகள் போல நடத்தியதாவும் குறிப்பாக கிரெட்டாவை இழுத்து வந்து இஸ்ரேல் கொடியை முத்தமிடச் செய்ததாகவும் செய்திகள் வந்தன. அவருடன் இருந்தவர்கள், பத்திரிகையாளர்கள் இந்த தகவலை வெளியிட்டிருந்தனர்.
இதன்பின்னர் இன்று (8) செய்தியாளர்களுடன் பேசிய கிரெட்டா , சிறையில் இஸ்ரேல் இராணுவத்தினர் தன்னையும் மற்ற கைதிகளையும் துன்புறுத்தியதை ஒப்புக்கொண்டுள்ளார்.
“இஸ்ரேல் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் எனக்கு சுத்தமான தண்ணீர் கிடைக்கவில்லை. மற்ற கைதிகளுக்கு தேவையான மருந்துகள் கிடைக்கவில்லை.
எனக்கு என்ன நேர்ந்தது என்பது செய்தியல்ல. என்னுடைய செய்தி தலைப்புச் செய்தி ஆக வேண்டாம். காஸா மக்களின் அனுபவிக்கும் துன்பத்தைவிட என்னுடன் இருந்த கைதிகள் இஸ்ரேல் இராணுவத்தினரால் மிகவும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர்” என்றார்.
ஆனால், இஸ்ரேல் இராணுவம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. சிறையில் உள்ள கைதிகளுக்கு தண்ணீர், உணவு, கழிப்பறை வசதிகள் சரியாக வழங்கப்படுவதாகக் கூறியுள்ளது.
முன்னதாக கிரெட்டா தன்பர்க் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், “கிரெட்டாவுக்கு கோபத்தைக் கட்டுப்படுத்துவதில் பிரச்சினை இருக்கிறது.
அவர் ஒரு நல்ல மருத்துவரைப் பார்க்க வேண்டும். எப்போதும் கோபமாகவே இருக்கிறார். அவர் பிரச்சினையை மட்டும்தான் ஏற்படுத்துபவர்” என்று கூறியிருந்தார்.


