அஜித் குமார் நாயகனாக நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இப்படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்தார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் படம் வெளியிடப்பட்டது. இப்படம் உலகளவில் சுமார் ரூ.230 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின.
ஆனால், இப்படம் வெளியான சில வாரங்களுக்குப் பிறகு பெரிய சர்ச்சை எழுந்தது. இதன் காரணம் – இளையராஜா. தமது மூன்று திரைப்பட பாடல்கள் குட் பேட் அக்லியில் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாகக் கூறி, இசையமைப்பாளர் இளையராஜா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்றம் இதை பரிசீலித்து, அந்த பாடல்களுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும், அந்த உத்தரவைக் கடந்து, பாடல்கள் தொடர்ந்து படத்திலும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் இடம் பெற்றிருந்ததாக இளையராஜா குற்றம்சாட்டினார்.
இதனால், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு அவர் சட்டநோட்டீஸ் அனுப்பினார். மேலும், பாடல்கள் நீக்கப்படாவிடில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
இந்தச் சர்ச்சைக்கு மத்தியில், தற்போது குட் பேட் அக்லி திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதனால், ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா உலகத்திலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


