நேபாளத்தில் காணாமல் போன இந்திய சுற்றுலாப் பயணிகள் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
தந்தையும், மகளுமான 52 வயது ஜிக்னேஷ் குமார் லல்லுபாய் படேல் மற்றும் 17 வயது பிரியான்சா குமாரி படேல் நேபாளத்திற்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில் அக்டோபர் 20ம் திகதி முதல் மனாங் மாவட்டத்திலிருந்து காணாமல் போனதாக தேடப்பட்டு வந்தனர்.
பல வாரங்கள் நீடித்த தேடுதல் வேட்டைக்கு பிறகு, நவம்பர் 9ம் திகதி இருவரும் பனியில் புதைந்திருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
APF துணை கண்காணிப்பாளர் சைலேந்திர தாபா வழங்கிய தகவலில், உயிரிழந்த இருவரின் உடலும் உள்ளூர் மடாலயத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் உயரத்தில் பனியால் மூடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு பணியாளர்கள் வழங்கிய தகவலில், உயிரிழந்த மகளும், தந்தையும், அக்டோபர் 20ம் திகதி ங்ஸ்யாங் கிராமத்தில் உள்ள கியால்சென் ஹோட்டலில் இருந்து மலேரியா மடாலயத்தை பார்க்க செல்வதாக தெரிவித்துவிட்டு கிளம்பியுள்ளனர்.
ஆனால் அதன் பிறகு அவர்களிடம் இருந்து தொடர்பு வராததை அடுத்து, ஹோட்டல் ஊழியர்கள் இருவரையும் காணவில்லை என பொலிஸில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் தேடுதல் பணியை தொடங்கிய பாதுகாப்பு அதிகாரிகள், நாளைக்குள் மீட்பு பணி நிறைவடையும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.


