தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தனியார் பாடசாலையொன்றில் போதைப்பொருள் தயாரிக்கப்பட்டு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேதா என்ற பாடசாலையில், பாடசாலை நிர்வாகி மலேலா ஜெய பிரகாஷ் கவுட் தலைமையில், மேல்தளத்தில் அமைந்திருந்த கெமிஸ்ட்ரி ஆய்வகத்தில் Alprazolam என்ற போதைப்பொருள் கடந்த 6 மாதங்களாக தயாரிக்கப்பட்டு வந்துள்ளது.
கீழ்தளத்தில் மாணவர்கள் வகுப்பறையில் பாடம் கற்றுக்கொண்டிருக்க, மேல்தளத்தில் போதைப்பொருள் உற்பத்தி நடைபெற்றுள்ளது.
வார நாட்களில் தயாரிக்கப்பட்ட போதைப்பொருள்கள், பாடசாலை விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியே எடுத்து செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான தகவலின் அடிப்படையில் போலீசார் நடத்திய சோதனையில், 7 கிலோ Alprazolam, ரூ.21 லட்சம் பணம், போதைப்பொருள் தயாரிப்பிற்கான மூலப்பொருட்கள் மற்றும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.
நிர்வாகி ஜெய பிரகாஷ் மற்றும் அவரின் இரண்டு துணைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


