‘தல’ அஜித்குமார் நடிப்பில் குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. இந்த படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல் இடம்பெற்று இருந்தன. இதனால் தன்னுடைய பாட்டை அனுமதியின்றி படக்குழு பயன்படுத்தியிருப்பதாக தயாரிப்பு நிறுவனத்தின் மீது இளையராஜா வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், இந்த பாடல் விவகாரம் தொடர்பில் பதிலளிக்க இளையராஜாவுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் கடந்த ஏப்ரல் 10-ஆம் திகதி அன்று திரையரங்குகளில் வெளியானது. இதில் அஜித்குமாருடன், த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, சுனில் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து இருந்தனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்த இந்தப் படத்தில், இளையராஜாவின் பாடல்கள் முக்கிய அம்சமாக இருந்தன. அத்துடன் அணைத்து பாடல்களும் இணையத்தில் வைரலானது.

இந்த படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைத்த ‘ஒத்த ரூபா தாரேன்’, ‘என் ஜோடி மஞ்ச குருவி’, ‘இளமை இதோ இதோ’ போன்ற புகழ்பெற்ற பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. ஆனால், இந்தப் பாடல்கள் தனது அனுமதியின்றி படத்தில் சேர்க்கப்பட்டதாக இளையராஜா குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து, பட தயாரிப்பாளரிடம் 05 கோடி இழப்பீடு மற்றும் மன்னிப்பும் கோரி இளையராஜா வழக்குத் தொடர்ந்தார்.
பதிப்புரிமை மீறல் தொடர்பான இந்த வழக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திஇருந்த நிலையில், சமீபத்தில் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இளையராஜா பாடல்களை மியூட் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இவ்வாறான சட்டச் சிக்கல்கள் இருந் தபோதிலும், ‘குட் பேட் அக்லி’ கடந்த மே 08 திகதியன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. பல மாதங்களாக ஓடிடியில் இருந்த இந்த படம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென தளத்திலிருந்து நீக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் பெரும் குழப்பமடைந்தனர். இந்த திடீர் நீக்கத்துக்கு காரணம் இளையராஜாவின் சட்டப் போராட்டமே என்று கூறப்படுகிறது. ஆனாலும் இதுகுறித்து ஓடிடி தளம் எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் இதுவரை வெளியிடவில்லை.
இந்நிலையிலேயே, அஜித்குமாரின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீது செப்டம்பர் 24-ஆம் தேதி பதிலளிக்குமாறு இளையராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


