நாட்டில் 13 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பதுளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, குருநாகல், கேகாலை, மொனராகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை, 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் வெளியிட்டுள்ள பிந்திய அறிக்கையிலேயே மண்சரிவு தொடர்பாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின் பிரகாரம், கண்டி, குருநாகல், கேகாலை மற்றும் மாத்தளை, மாவட்டங்களுக்கு மூன்றாம் நிலை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பதுளை, நுவரெலிய மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை செம்மஞ்சள் எச்சரிக்கையும், கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, மாத்தறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் நிலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்றும் நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணத்தின் சில பகுதிகளிலும், மாத்தளை மாவட்டத்திலும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மாத்தறை மாவட்டங்களிலும் சுமார் 75 மில்லிமீற்றர் வரையான ஓரளவு பலத்த மழைவீழச்சி பதிவாகக் கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.


