இந்தியா முழுவதும் தெருநாய் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உத்தரபிரதேச அரசு ஒரு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஒரு நாய் காரணமின்றி ஒருவரைக் கடித்தால், அந்த நாயை 10 நாட்களுக்கு விலங்கு மையத்தில் அடைத்து வைப்பார்கள். ஆனால், அதே நாய் மறுமுறையும் காரணமின்றி ஒருவரைக் கடித்தால், வாழ்நாள் முழுவதும் காப்பகத்திலேயே அடைத்து வைக்கப்படும்.
இது கிட்டத்தட்ட நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிப்பதற்குச் சமம்.
அந்த நாயை காப்பகத்திலிருந்து மீண்டும் வெளியே கொண்டு செல்ல ஒரே வழி – யாராவது தத்தெடுத்து, “மீண்டும் தெருவில் விடமாட்டோம்” என்று உறுதிமொழி கொடுக்க வேண்டும்.
மேலும், காப்பகத்துக்குக் கொண்டுவரப்படும் நாய்கள் பரிசோதிக்கப்பட்டு கருத்தடை செய்யப்படாதிருந்தால், கருத்தடை செய்யப்பட்டு, மைக்ரோசிப் பொருத்தப்படும். இதன் மூலம் அந்த நாய்களின் இருப்பிடத்தை எளிதாக கண்காணிக்க முடியும்.
ஒரு நாய் காரணமின்றி கடித்ததா, அல்லது தற்காப்புக்காக கடித்ததா என்பதை கால்நடை மருத்துவரைச் சேர்ந்த 3 பேர் கொண்ட குழு தீர்மானிக்கும்.
இந்த உத்தரவை மாநில முதன்மைச் செயலாளர் அம்ரித் அபிஜாத் வெளியிட்டுள்ளார்.


