கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே கடலூர் – ஆலப்பாக்கம் ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதியுள்ளது. இந்த விபத்தில் மாணவர் உள்பட இருவர் பலியாகினர். தகவலறிந்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிச் சென்று காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
ரயில் மோதியதில் பள்ளி வேன் 50 மீட்டர் தொலைவுக்கு தூக்கி வீசப்பட்டு உருக்குலைந்ததில், பள்ளி சென்ற ஒன்றுமரியா பள்ளிக் குழந்தைகளில் இருவர் பலியானதாக முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
விபத்து நடந்ததை அறிந்து அந்தப் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் அங்கு குவிந்தார். மேலும், அவர்கள் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்துக்கு செம்மங்குப்பம் பகுதியில் ரயில்வே கேட் கீப்பர் தூங்கிக் கொண்டிருந்ததே காரணமாகப் பார்க்கப்படுகிறது. இதனால், அங்கிருந்தவர்கள் கேட் கீப்பர் மீது சரமாரியான தாக்குதலில் ஈடுபட்டனர். காவல் துறையினர் அவரை மீட்டனர்.
காலை 7 மணியளவில் பல்வேறு தரப்பினரும் வேலை மற்றும் பள்ளிகளுக்குச் செல்லும் வேளையில், இந்த மாதிரி கேட் கீப்பர் அலட்சியாமாகத் தூங்கிய விவகாரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரயில்வே துறை விசாரணையைத் துவங்கியுள்ள நிலையில், முழுமையான விசாரணைக்குப் பின்னரே, உண்மையான விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


