சின்ன திரையில் நடித்து பிரபலமடைந்த காவ்யா அறிவுமணி ஏராளமானப் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள காவ்யா, பொதுத்தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று செய்திகளில் புகைப்படத்துடன் இடம்பெற வேண்டும் என்ற கனவுடன் இருந்ததாகவும், ஆனால், அது நடக்காத நிலையில், தற்போது ஒரு நடிகையாக தனது நேர்காணல்கள் செய்தித்தாள்களில் இடம்பெறுவதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
நாம் ஒரு திட்டத்தை வைத்திருந்தால், விதி வேறொரு திட்டத்தை நமக்காக வைத்திருப்பதாகப் பதிவிட்டுள்ள அவர், அந்தத் திட்டம் முழுக்க முழுக்க கனவு, நம்பிக்கை மற்றும் சினிமாவின் மகிமையைக் கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தப் பயணத்தில் நான் எங்கு தொடங்கி, எங்கு வந்து நின்றுகொண்டிருக்கிறேன் என்பதை உணர முடிவதாகவும், எதிர்காலத்தில் ஏராளமானப் படங்களில் நடிக்கவுள்ளதாகவும், அவை குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
காவ்யா கடந்த பாதை
2019ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியின் பாரதி கண்ணம்மா தொடரில் அறிவுமணி என்ற பாத்திரத்தில் சின்ன திரையில் அறிமுகமானார் காவ்யா அறிவுமணி.
பின்னர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற பாத்திரத்தில் விஜே சித்ராவுக்கு பதிலாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில், காவ்யாவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
சின்ன திரையில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து வெள்ளித் திரையிலும் நடிக்க அடிக்கடி ஆடிஷன் கொடுத்து வந்த நிலையில், மிரள் படத்தில் 2022-ல் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 2023-ல் ரிப்பப்பரி, 2025-ல் நிறம் மாறும் உலகில் என அடுத்தடுத்த படங்களில் நடித்து அசத்தினார். தற்போது ஏராளமானப் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.