Monday, June 16, 2025
spot_img
Homeஉலக செய்திகள்ஈரான் - இஸ்ரேல் அதிகரிக்கும் போர்ப் பதற்றம்: டெஹ்ரானில் பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு

ஈரான் – இஸ்ரேல் அதிகரிக்கும் போர்ப் பதற்றம்: டெஹ்ரானில் பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு

ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் மற்றும் ராணுவத் தளங்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல் மற்றும் ஈரானின் பதிலடி தாக்குதலால் மத்திய கிழக்கில் பெரும் போர்ப்பதற்றம் நிலவுகிறது.

முன்னதாக ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாக்களுக்கு ஆதரவாக கடந்த ஆண்டு இஸ்ரேலை தாக்கிய ஈரான், இஸ்ரேலுக்கு எதிராக அணு குண்டுகளை தயாரித்து வருவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது.

அப்படி அணு ஆயுத பலம் பொருந்திய ஈரான், தங்கள் இருத்தலுக்கு எப்போதும் அச்சுறுத்தல் என கருதி வரும் இஸ்ரேல், ஈரானின் அணு ஆயுத தளங்கள் அனைத்தையும் தகர்க்க திட்டமிட்டது.

இதற்காக ஈரான் மீது நேற்று முன்தினம் அதிகாலையில் இருந்து இஸ்ரேல் அதிரடி தாக்குதலை தொடங்கியது. தங்களை தற்காத்துக்கொள்ள நடத்தப்படும் முன்கூட்டிய தாக்குதல் இது என அறிவித்த இஸ்ரேல், இந்த ராணுவ நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என பெயரிட்டு இருந்தது.

ஈரானின் அணுசக்தி மையங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணைகள் வைக்கப்பட்டிருக்கும் ராணுவ தளங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை இஸ்ரேலின் போர் விமானங்கள் துல்லியமாக தாக்கின.

குறிப்பாக ஈரான் தலைநகர் டெஹ்ரான் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகள், மேலும் முக்கிய அணுசக்தி மையமான நட்டன்ஸ், இஸ்பகான் உள்பட பல அணுசக்தி மையங்கள் தகர்க்கப்பட்டன. 200-க்கு மேற்பட்ட விமானங்கள் மற்றும் டிரோன்கள் மூலம் நடத்திய இந்த நாசகார தாக்குதலில் 78 பேர் கொல்லப்பட்டனர். 320 பேர் காயமடைந்ததாக ஐ.நா.வுக்கான ஈரான் தூதர் தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களில் இஸ்ரேலின் முக்கிய ராணுவ தளபதிகள் பலரும் அடங்குவர். குறிப்பாக ஈரானின் ஆயுதப்படைகள் தலைவர் முகமது பகேரி, துணை ராணுவப்படையான புரட்சிகர படைத்தளபதி உசேன் சலாமி உள்பட பல தளபதிகளும் கொல்லப்பட்டனர்.

மேலும் ஏராளமான அணு விஞ்ஞானிகளும் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலின் இந்த திடீர் தாக்குதல் உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

பதிலடி கொடுத்த ஈரான்

இந்நிலையில் இஸ்ரேலின் இந்த அதிரடிக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அறிவித்தது. ‘அவர்கள் செய்த இந்தப் பெரிய குற்றத்தில் இருந்து அவர்கள் தப்பிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்’ என்று ஈரான் உச்சபட்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனி அறிவித்திருந்தார்.

அவர் அறிவித்த சில மணி நேரத்திலேயே ஈரானும் பதிலடி கொடுத்தது. அதன்படி 200-க்கு மேற்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் 100-க்கு மேற்பட்ட டிரோன்களை நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து அலை அலையாக இஸ்ரேலுக்குள் செலுத்தியது.

இவற்றை நடுவானில் இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. ஆனாலும் சில ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் இஸ்ரேலின் பலம் பொருந்திய அயர்ன் டோம் வான் பாதுகாப்பு அமைப்பையும் உடைத்துக்கொண்டு பல இடங்களை தாக்கியது.

முக்கிய நகரங்கள் மீது தாக்குதல்

குறிப்பாக ஜெருசலேம், டெல் அவிவ் போன்ற நகரங்களில் நடந்த தாக்குதலில் பெரும் சேதம் விளைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பகுதிகளில் ஏராளமான கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் சேதமடைந்து உள்ளன. பல இடங்களில் வெடிப்பு சத்தங்களும், கரும்புகை வெளியேறும் காட்சிகளும் ஊடகங்களில் வெளியாகி உள்ளன.

ஈரானின் இந்த பதிலடியில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும், 70-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பல இடங்களில் வான் தாக்குதலுக்கான அலாரம் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தன.

இந்த தாக்குதலை தொடர்ந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இஸ்ரேல் அறிவுறுத்தியது. பல இடங்களில் ஈரானின் தாக்குதலை அமெரிக்க தயாரிப்பு வான்பாதுகாப்பு அமைப்புகள் முறியடித்ததாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் சிலர் கூறினர்.

விமான போக்குவரத்து பாதிப்பு

ஈரான் மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதல் மற்றும் ஈரானின் பதில் தாக்குதல், தீவிர போராக உருமாறும் வாய்ப்பு இருப்பதாக உலக நாடுகள் அச்சம் வெளியிட்டு உள்ளன. ஈரான் மீதான இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இரு நாடுகளும் விரைவில் போர் நிறுத்தம் செய்யுமாறும் வலியுறுத்தி உள்ளன.

இரு நாடுகளுக்கு இடையேயான இந்த தாக்குதலால் மத்திய கிழக்கு வழியான விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இரு நாடுகளும் தங்கள் வான்பகுதியை மூடியுள்ள நிலையில் சர்வதேச நாடுகளின் விமானங்கள் அந்த வழியான போக்குவரத்தை ரத்து செய்துள்ளன.

அமெரிக்கா-ஈரான் இன்று பேச்சுவார்த்தை

இதற்கிடையே அமெரிக்கா-ஈரான் இடையேயான அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஓமனில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்த தாக்குதல் காரணமாக இந்த பேச்சுவார்த்தை நடைபெறுவதில் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் சூழலில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை என ஈரான் கூறியுள்ளது. இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் கூறுகையில், ‘பேச்சுவார்த்தையை அர்த்தமற்றதாக்கும் வேலையை அமெரிக்கா செய்து உள்ளது’ என தெரிவித்தார்.

எனினும் இன்றைய பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதா? என்று எதையும் அவர் கூறவில்லை. அதேநேரம் இஸ்ரேல் தனது தாக்குதல் நடவடிக்கை மூலம் ஈரானின் அனைத்து சிவப்பு கோடுகளையும் கடந்து விட்டதாக குற்றம் சாட்டினார்.

இஸ்ரேல் எச்சரிக்கை

மறுபுறம் தங்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என இஸ்ரேல் எச்சரித்து உள்ளது. இல்லையென்றால் டெஹ்ரானை எரித்து விடுவோம் என அந்த நாட்டு ராணுவ மந்திரி கேட்ஸ் மிரட்டல் விடுத்து உள்ளார். இதன்படி தங்கள் போர் விமானங்கள் ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்பை உடைத்துக்கொண்டு எளிதாக டெஹ்ரானை அடைந்து வருவதாகவும் இஸ்ரேல் தெரிவித்து வருகிறது.

இவ்வாறு இஸ்ரேலும், ஈரானும் தங்கள் தாக்குதலை தொடர்வதில் உறுதியாக இருப்பதால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர்ப்பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் இஸ்ரேல் வீசிய ஏவுகணையால் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இரண்டு முக்கிய எண்ணெய்க் கிடங்குகள் பற்றி எரிந்து வருவதாக ஈரானிய எண்ணெய் அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

ஈரானிய எண்ணெய் அமைச்சகத்தின் தகவல்படி, டெஹ்ரானின் வடமேற்கே உள்ள ஷாஹ்ரானில் உள்ள எண்ணெய் கிடங்குகளும், நகரத்திற்கு தெற்கே உள்ள மற்றொன்றும் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்புப்படை தற்போது வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

ஈரானிய ஆட்சியின் அணு ஆயுதத் திட்டம் தொடர்பான டெஹ்ரானில் உள்ள இலக்குகள் மீது ஐ.டி.எப் விரிவான தொடர் தாக்குதல்களை நடத்தி முடித்தது. இலக்குகளில் ஈரானிய பாதுகாப்பு அமைச்சக தலைமையகம், எஸ்.பி.என்.டி அணுசக்தி திட்டத்தின் தலைமையகம் மற்றும் கூடுதல் இலக்குகள் ஆகியவை அடங்கும், இது ஈரானிய ஆட்சி அணு ஆயுதத்தைப் பெறுவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துச் சென்றதற்காக மற்றும் ஈரானிய ஆட்சி அதன் அணு ஆயுதக் காப்பகத்தை மறைத்து வைத்திருந்ததற்காக

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments