Monday, June 16, 2025
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்பவுண்டரி எல்லை 'கேட்ச்' விதிமுறையில் மாற்றம் - ஐ.சி.சி அதிரடி நடவடிக்கை

பவுண்டரி எல்லை ‘கேட்ச்’ விதிமுறையில் மாற்றம் – ஐ.சி.சி அதிரடி நடவடிக்கை

தற்போது கிரிக்கெட் அதிவேகமாக மாற்றம் கண்டு வருகிறது. பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடி அதிக அளவில் சிக்சர் மழை பொழிந்து வருகிறார்கள். அதனை தடுத்து நிறுத்த வீரர்கள் பல்வேறு சாகச முயற்சிகளை எடுத்து வருகின்றனர். பவுண்டரி எல்லையில் சிக்சர்களை தடுக்கும் முயற்சிகளில் முக்கியமானது ‘பன்னி ஹோப்ஸ்’ என்னும் ஒரு வகையான கேட்ச்சாகும்.

அதாவது பவுண்டரி எல்லையில் அந்தரத்தில் துள்ளிக்குதித்து பிடிக்க முயலும் போது எல்லைக்கோட்டை தாண்டி விடுவோம் என்று நினைக்கையில் தரையை தொடும் முன்பாக வீரர் பந்தை மைதானத்துக்குள் தூக்கி எறிந்து விடுவார். அத்துடன் பவுண்டரி எல்லைக்கு வெளியே குதிக்கும் அவர் உடனடியாக களம் திரும்பி பந்தை பிடிப்பார். இந்த சவாலான முறையில் தற்போது அதிக கேட்ச்கள் செய்யப்பட்டு வருகின்றன.

இதுபோன்ற பார்வையாளர்களை கவரும் வித்தியாசமான பீல்டிங் முயற்சியில் சில கேட்ச்கள் வழக்கத்துக்கு மாறாக இருப்பதாகவும், நியாயமற்றதாக உள்ளதாகவும் பல்வேறு புகார்கள் எழுந்தன. குறிப்பாக பிக்பாஷ் லீக் போட்டியில் 2023-ம் ஆண்டு ஜோர்டான் சில்க் அடித்த பந்தை மைக்கேல் நிசேர் களத்திற்கு வெளியே 2 முறை கையாண்டு உள்ளே தூக்கி எறிந்து தனது கேட்ச்சை பூர்த்தி செய்தார்.

இதேபோல் 2020-ம் ஆண்டு மேத்யூ வேட் அடித்த பந்தை பவுண்டரி எல்லையில் குதித்து மேட் ரென்ஷா பிடித்து வெளியில் விழும் முன் உள்ளே எறிய அதனை சக வீரர் டாம் பான்டன் கேட்ச் செய்தார். இந்த இரு கேட்ச்களும் விளையாட்டு உத்வேகத்துக்கு எதிரானது என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து பவுண்டரி எல்லையில் துள்ளிக்குதித்து பிடிக்கும் வித்தியாசமான கேட்ச் விதிமுறையில் மாற்றம் செய்வது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் (ஐ.சி.சி.), கிரிக்கெட் விதிமுறைகளை வகுக்கும் மெரில்போன் கிரிக்கெட் கிளப்பும் (எம்.சி.சி.) ஆலோசனை நடத்தி பழைய விதிமுறையில் திருத்தம் கொண்டுவந்துள்ளது. எம்.சி.சி. கொண்டு வந்து இருக்கும் கேட்ச் குறித்த புதிய விதிமுறையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது அனைத்து உறுப்பினர் வாரியங்களுக்கும் சுற்றிக்கையாக அனுப்பி இருக்கிறது.

புதிய விதிமுறையின்படி பவுண்டரி எல்லைக்கு வெளியே அந்தரத்தில் கேட்ச் செய்ய முயற்சிக்கும் பீல்டர் பந்தை ஒரு முறை மட்டுமே கையாள முடியும். இரண்டாவது முறையாக பந்தை தொட்டால் அவர் மைதானத்திற்குள் தான் இறங்க வேண்டும். மாறாக அவர் வெளியில் இறங்கினால் அது பவுண்டரியாக கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

அதேநேரத்தில் பவுண்டரி எல்லையில் துள்ளிக்குதித்து பந்தை பிடித்து மைதானத்திற்குள் எறிந்து விட்டு வெளியே சென்று விட்டு உடனடியாக திரும்பி வந்து பிடிப்பது அனுமதிக்கப்படும். இதேபோல் பவுண்டரி எல்லையில் துள்ளிக்குதித்த நிலையில் பிடிக்கும் வீரர் பந்தை மைதானத்துக்குள் தூக்கி எறிகையில், அதனை சக வீரர் பிடிக்கும் போது, பந்தை எறிந்த வீரர் மைதானத்துக்குள் வந்து விட வேண்டும்.

அப்படி வந்து விட்டால் அது கேட்ச்சாக ஏற்றுக்கொள்ளப்படும். சக வீரர் கேட்ச் செய்யும் முன்பு பந்தை எறிந்த வீரர் வர தவறினால் அது கேட்சாக கருதப்படாது. அது பவுண்டரியாக கணக்கில் கொள்ளப்படும். இந்த திருத்தியமைக்கப்பட்ட விதிமுறை வருகிற 17-ந் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. காலேயில் 17-ந் தேதி தொடங்கும் இலங்கை-வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்த விதிமுறை நடைமுறைக்கு வருகிறது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments