சமீபகாலமாக இலங்கை அகதிகளின் பின்னணியில் அதிக படங்கள் உருவாகி வருகிறது. சசிகுமார், சிம்ரன் நடித்த ‘டூரிஸ்ட் பேமிலி’ படம் வெளியாகி வெற்றி பெற்றது. அடுத்து சசிகுமார் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘பிரீடம்’ படமும் இலங்கை அகதிகளை பின்னணியாக கொண்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் குடியேறியுள்ள அகதிகளை பின்னணியாக கொண்டு ‘இரவுப்பறவை’ என்ற படம் உருவாகி உள்ளது.
இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்திற்கு வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பூர்வீக மக்களுக்கு இந்நாட்டில் குடியுரிமை வேண்டி, அகதிகளாக வந்தவர்களில் ஒரு பெண் போராட்டம் நடத்தி, குடியுரிமையை பெறும் கதையுடன் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தை தமிழ் திரை சேனல் சார்பில் வி.டி.ராஜா, ஆர்.பாண்டியன் இணைந்து தயாரித்துள்ளனர். வேதாஜி பாண்டியன் எழுதி இயக்கியுள்ளார். சத்யா, இலங்கையை சேர்ந்த நந்தினி, ‘நிழல்கள்’ ரவி, சிவா, டாக்டர் ஆர்.பாண்டியன், செல்வகுமாரன் நடித்துள்ளனர். பகவதி பாலா ஒளிப்பதிவு செய்ய, ஆல்வின் கலைபாரதி பாடல்கள் எழுதி இசை அமைத்துள்ளார். வரும் 27ம் தேதியன்று தியேட்டர்களில் வெளியாகிறது.