Wednesday, June 11, 2025
spot_img
Homeஉலக செய்திகள்டிரம்ப் குறித்த சர்ச்சைக்குரிய பதிவை நீக்கிய எலான் மஸ்க்

டிரம்ப் குறித்த சர்ச்சைக்குரிய பதிவை நீக்கிய எலான் மஸ்க்

அமெரிக்க அதிபராக 2-வது முறையாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், நிர்வாக ரீதியாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக அமெரிக்க அரசு நிர்வாகத்தில் செலவு குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் டாஜ்(DOGE) துறையில் தலைமை ஆலோசகராக டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை இயக்குநரும், தொழிலதிபருமான எலான் மஸ்க்கை நியமித்தார்.

இவருடைய ஆலோசனையின் பேரில், அமெரிக்க அரசு பணிகளில் ஆட்குறைப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. மேலும் சர்வதே அளவில் அமெரிக்க அரசு சார்பில் பல்வேறு திட்டங்களுக்காக வழங்கப்பட்டு வந்த நிதி உதவிகள் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில், அமெரிக்காவின் செனட் அவையில், பொருளாதார செலவீனங்களை மாற்றி அமைக்கும் வகையில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கான வரி சலுகைகளை ரத்து செய்யும் அம்சம் இடம் பெற்றுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த எலான் மஸ்க், டிரம்பின் இந்த மசோதா அருவருப்பானது என்று சாடியிருந்தார்.

இந்த விவகாரத்தில் டிரம்புக்கும் எலான் மஸ்கிற்கும் இடையே வார்த்தை மோதல் வெடித்தது. இது தொடர்பாக எலான் மஸ்க், “நான் இல்லையென்றால் டிரம்பால் வெற்றி பெற்றிருக்க முடியாது. டிரம்ப் நன்றியுணர்வு அற்றவர்” என்று விமர்சித்தார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும், துணை அதிபர் ஜே.டி.வான்சை அந்த பொறுப்பில் நியமிக்க வேண்டும் என்று கூறினார்.

இதற்கிடையில், பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் டிரம்பின் பெயர் உள்ளதால் அது இன்று வரை வெளியிடப்படாமல் உள்ளது என்று பகிரங்க குற்றச்சாட்டை எலான் மஸ்க் முன்வைத்தார். அவரது குற்றச்சாட்டு அமெரிக்க அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதே சமயம், அரசின் செலவினங்களை குறைக்க எலான் மஸ்க்கின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு வரும் மானியங்கள், சலுகைகள் உள்ளிட்டவை நிறுத்தப்படும் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். தொடர்ந்து எலான் மஸ்க் தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில், “புதிய கட்சியை உருவாக்குவதற்கான நேரம் வந்துவிட்டதா?” என வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினார். இதனால் எலான் மஸ்க் புதிய கட்சி தொடங்கப் போகிறாரா? என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் டிரம்பின் பெயர் உள்ளதாக கூறி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவை எலான் மஸ்க் தற்போது நீக்கியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையிலான வார்த்தை மோதல் முடிவுக்கு வந்துவிட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக எலாஸ் மஸ்கின் குற்றச்சாட்டு குறித்து பேசிய டிரம்ப், “எலான் மஸ்க் என்னை எதிர்ப்பது எனக்கு பிரச்சினை இல்லை. ஆனால் அவர் இதை பல மாதங்களுக்கு முன்பே செய்திருக்க வேண்டும்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments