இந்தியாவுக்கு யாத்திரை மேற்கொள்வது குறித்து ஐயப்ப பக்த சுவாமிகளுடனான கலந்துரையாடலொன்று பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (04) நடைபெற்றது.
இலங்கை ஐயப்ப பக்தர்களின் இந்தியா நோக்கிய யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்துவதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்கு ஏதுவான நடவடிக்கைகள் ஓரளவு நிறைவுபெற்ற நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எஸ்.ஆனந்தகுமாரின் வேண்டுகோளுக்கிணங்க, இந்த ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஐயப்ப பக்தர்களின் இந்தியாவுக்கான யாத்திரையானது இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நேரடி வழிகாட்டல் மூலம், திணைக்களத்தினரின் முழுமையான கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டும் என இதன்போது தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் யாத்திரையின்போது சுவாமிமார் கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகள், அவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற சலுகைகள், விசா தொடர்பான கட்டணப் பிரச்சினைகள், விமான டிக்கட்டுகள் மற்றும் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் இந்த கலந்துரையாடலில் விரிவாக பேசப்பட்டது.
இது தொடர்பான மற்றொரு கலந்துரையாடல் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவலர்கள் அமைச்சர், இந்து சமய கலாச்சார அலுவலர்கள் திணைக்கள அதிகாரிகளுடன் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.