கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்தின் பிரகாரம் சிவில் மாணவர்களை இந்த பல்கலைக்கழகத்துக்கு இணைத்துக்கொள்ள முடியாது. அவ்வாறு இணைத்துக்கொள்வதாக இருந்தால் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். கடந்தகால அரசாங்கங்கள் இந்த விடயத்தில் நினைத்த பிரகாரம் செயற்பட்டமையே இந்த நெருக்கடி நிலை ஏற்பட காரணமாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (4) பிரதமருக்கான கேள்வி நேரத்தில், ரவி கருணாநாயக்க எம்.பி. கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்தின் பிரகாரம் சிவில் மாணவர்களை இணைத்துக்கொள்ள முடியாது. அவ்வாறு சிவில் மாணவர்களை இணைத்துக்கொள்வதாக இருந்தால் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். தற்போதும் இது தொடர்பில் சமூகத்தில் நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்கிறது. கடந்த கால அரசாங்கங்கள் நினைத்த பிரகாரம், சில விடயங்களை மேற்கொண்டதால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளாகும். அதனால் இந்த சிக்கல்களை ஒவ்வொன்றாக தற்போது எங்களுக்கு தீர்க்க வேண்டியிருக்கிறது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் நிர்மாணிக்கப்பட்டதன் நோக்கம் ஒன்று இருக்கிறது. அதாவது இராணுவ கெடட்ஸ்களை பயிற்றுவிக்கும் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்ற நோக்கத்திலே சேர் ஜோன் கொத்தலாவல இந்த பல்கலைக்கழகம் அமையப்பட்டுள்ள காணியை நன்கொடையாக வழங்கியிருந்தார்.
ஆனால் பல்வேறு காரணங்களால் கெடட் அளவு விரைவாக குறைந்துள்ளது. எங்களை பொறுத்தவரை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை சர்வதேச ரீதியான இராணுவ பல்கலைக்கழகமாக மாற்றியமைக்க வேண்டும். இதுதான் இந்த பல்கலைக்கழகத்தின் நோக்கம். அதற்காகவே சேர் ஜோன் கொத்தலாவல இந்த காணியை கொடையாக வழங்கினார். அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நாங்கள், சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு நடவடிக்கைகளை செய்து வருகிறோம்.
கடந்த காலங்களில் சட்ட விரோதமான முறையில் செயற்பட்டதால், மாணவர்களும் நெருக்கடி நிலைக்கு ஆளாகி இருக்கின்றனர். பாதுகாப்பு அமைச்சுக்கும் இதனால் பிரச்சினையாகி இருக்கிறது.
அதனால் கல்விக்கு சம உரிமை வழங்கி, சட்ட ரீதியில், பாதுகாப்பு அமைச்சுக்கு சுமையாகாத வகையில் இதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் முறை தொடர்பில் நாங்கள் சட்டத்தை மீளாய்வு செய்து வருகிறோம்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் பாதுகாப்பு அமைச்சுக்கு கீழ் உள்ள பல்கலைக்கழகமாகும். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இஸட் புள்ளிகளின் பிரகாரம் இந்த பல்கலைக்கழகத்துக்கு மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவதில்லை. மாறாக அதற்கு என தனியான நடைமுறை ஒன்று இருக்கிறது. ஆனால் 2019இல் மாத்திரம் விசேட காரணம் ஒன்றுக்காக, அதாவது, 100 மாணவர்களை வைத்திய துறைக்கு மேலதிகமாக இணைத்துக்கொள்வதற்கு எடுத்த தீர்மானம் காரணமாக அந்த 10 மாணவர்களை இஸட் புள்ளிகளுக்கமைய இணைத்துக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். அதற்கான பணத்தை திறைசேரியில் இருந்து மாணவர்களுக்கு செலவிடப்பட்டிருக்கிறது என்றார்.