மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரில் வரும் ஆகஸ்டு 10ம் தேதி அன்று வன்னியர் சங்கம் சார்பில் மகளிர் மாநாடு நடைபெறும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு கட்சியிலும், குடும்பத்திலும் நடப்பது தான் தற்போது பாமகவிலும் நடக்கிறது.
வன்னியர் சங்கம் சார்பில் ஆகஸ்டு 10ம் தேதி மகளிர் மாநாடு பூம்புகாரில் நடைபெறும். மகளிர் மாநாட்டில் பங்கேற்குமாறு அன்புமணிக்கும் அழைத்து விடுக்கப்பட்டுள்ளது. அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவீர்களா என்பது போன்ற கேள்விகள் தேவையற்றவை. வரும் வியாழக்கிழமை அன்று அன்புமணி குறித்த கேள்விகளுக்கு பதிலளிப்பேன். பொருளாளராக ஒரு சிறுபான்மையினர் இருக்க வேண்டும் என்பதால் திலகபாமா மாற்றம் செய்யப்பட்டார். சிறுபான்மையினர் தான் பொருளாளர் என்பதை தான் நாங்கள் தொடர்ந்து கடைபிடித்து வந்தோம்.
ஒவ்வொருவரின் செயல்பாட்டையும் பார்த்து அவர்களை மாற்றுவோம். 46 ஆண்டுகளாக பாமகவை நான் தான் இயக்கி வருகிறேன். தொண்டர்களோடு தொடர்ந்து பயணம் செய்வேன்.
எது எப்போது நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.