77 வருடங்களாக நடைமுறையில் உள்ள மாநகர சபை கட்டளைச் சட்டம் தமிழில் மொழிபெயர்க்கப்படாதது, தமிழ் பேசும் மக்களுக்கு நீதியற்ற நிலையை உருவாக்குவதாகும் என தேசிய மக்கள் சக்தியின் (NPP) கொட்டாஞ்சேனை கிழக்கு வட்டார உறுப்பினர் காயத்ரி விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனவே, உடனடியாக அந்த சட்டம் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர் மேல் மாகாண ஆளுநர் ஹனிப் யூசுபிடம் முன்வைத்தார்.
அண்மையில் மேல் மாகாண ஆளுநர் ஹனிப் யூசுப்பை மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடிய போதே காயத்ரி விக்ரமசிங்க இந்த வேண்டுகோளை விடுத்தார்.
அந்த சந்திப்பில், மாநகர சபை மேயராக பதவி ஏற்கவிருக்கும் வ்ராய் கெலி பல்தஸார், துணை மேயராக பதவியேற்கவிருக்கும் ஹேமந்த வீரக்கோன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த நேர்காணலின்போது, 77 வருடங்களாக நடைமுறையில் உள்ள மாநகர சபை சட்டம் தமிழில் உள்ளடக்கப்படாததை குறிப்பிட்டு, தமிழ் பேசும் மக்களுக்கு உரிமை வழங்கும் வகையில், அவ்விதியை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என காயத்ரி விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
ஆளுநர் ஹனிப் யூசுப் இந்த கோரிக்கையை கவனமாக கேட்டதோடு, இது தொடர்பாக தேவையான பரிசீலனை மேற்கொள்ளவுள்ளதாக உறுதி அளித்தார்.
இச் சட்டம் 1987 ஆம் ஆண்டு சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.