தமிழ்நாட்டில் இருந்து முறைப்படி தாயகம் திரும்புபவர்களையும் சிறையில் தள்ளுவதன் மூலம் தமிழர்கள் நாட்டிற்குள் வரக்கூடாது என அநுர அரசு விரும்புகின்றதா என தமிழ் அரசுக் கட்சியின் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பியவரை கைது செய்தமை தொடர்பில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இடம்பெற்ற போரின் காரணமாக உயிரைக் காப்பதற்காக படகுகள் மூலம் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தாயக உறவுகள் தொடர்ந்தும் பெரும் வேதனையின் மத்தியில் இரண்டாம்தரப் பிரஜைகள் போன்று தவிக்கின்றனர். இவர்களில் பல ஆயிரம்பேர் தாயகம் வரவும் தயாராகவுள்ளனர்.
இவ்வாறு காத்திருப்போரை நாடு திரும்புமாறும் சகல ஏற்பாடும் செய்து தரப்படும் எனத் தெரிவிக்கும் அரசு முறைப்படி சகல ஆவணங்களையும. பெற்று வருபவர்களையே பொலிஸார் மூலம் வழக்குப் பதிவு செய்து சிறையில் தள்ளுவதன் மூலம் எஞ்சியோரை அச்சுறுத்துகின்றது. ஏனெனில் 75 வயது முதியவரையே சிறையில் தள்ளும் இந்த அரசு இளையோரை என்ன பாடுபடுத்துமோ அல்லது பெண்களிற்கு என்ன நெருக்கடியோ என நியாயமான ஐயம் எழும். இதன் மூலம் வடக்கு கிழக்கில் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்து விடக்கூடாது என்பதில் அரசு குறியாக உள்ளமை வெளிப்படையாகவே தெரிகின்றது.
ஒரு பக்கம் நிலங்களை அரச உடமையாக்கத் துடிக்கும் அரசு அதனை தடுத்தமையால் தமிழ் மக்கள் தாயகம் திரும்பினால் நிலத்தேவை அதிகமாகிவிடும் என்பதனை வழிகாட்டும் 3ஆம் தரப்பின் ஆலோசணையின் பெயரில் சிறுபான்மையினரை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பது தொடர்பில் ஓர் புலமைமிக்கவர் இலங்கை வந்து திரும்பியபோதே இவ்வாறான அநீதிகளிற்கு இலங்கை வித்திடும் என்பதனை நாமும் ஊகித்தோம் அவர்களை திருப்திப்படுத்த எமது மக்களை அரசு திட்டமிட்டு வஞ்சிக்கின்றது .
எனவே இலங்கை அகதிகள் விடயத்தில் யு.என்.எச்.சி.ஆர் மற்றும் இந்திய அரசுகள் மௌனம் காக்க கூடாது. இலங்கை அரசின் இரட்டை வேடத்தைப் புரிந்துகொண்டு சகல விதமான அழுத்தங்களையும் பிரயோகித்து தாயகம் திரும்ப எண்ணும் அகதிகளற்கு தாய் நாட்டில் உள்ள நடமாடும் சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றார்.