இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 20ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியான நிலையில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 7ம் தேதி ரோகித் சர்மா அறிவித்தார்.
ரோகித்தை தொடர்ந்து விராட் கோலியும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து, எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு புதிய கேப்டன், ரோகித் மற்றும் விராட் கோலிக்கு சரியான மாற்று வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு பி.சி.சி.ஐ வந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, ரோகித் சர்மா, விராட் கோலி அடுத்தடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றதால் பல ரசிகர்கள் கவலையடைந்து இருப்பார்கள் என்பது தெரியும். ஒரு கட்டத்தில் சச்சின் தெண்டுல்கர், ராகுல் டிராவிட், வி.வி.ஸ். லட்சுமணன், சவுரவ் கங்குலி ஆகியோர் ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற போது பதற்றம் ஏற்பட்டது.
ஆனால் சில ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா உலகின் ‘நம்பர் ஒன்’ அணியாக உருவெடுத்தது. இந்தியாவில் கிரிக்கெட் பிரபலமாக இருக்கும் வரை, போதுமான அளவுக்கு திறமையான இளம் வீரர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள்.
ரோகித், கோலியின் இடத்தை நிரப்ப சற்று காலம் பிடிக்கும் எனவே நாம் பதற்றம் அடைய தேவையில்லை. சச்சின், கங்குலி உள்ளிட்டோர் ஓய்வு பெற்ற போது, நமது பந்து வீச்சு துறை முன்னேற்றம் கண்டது. அதே போல் மீண்டும் நட்சத்திர வீரர்கள், புதிய பந்து வீச்சாளர்கள் உருவெடுப்பார்கள். இந்திய அணி தொடர்ந்து உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாக திகழும்.
மேலும் ரோகித், கோலி அங்கம் வகித்த இந்திய அணி தான் நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமான தோல்வியை தழுவியது. எனவே இந்த அணியிடம் தோற்பதற்கு எதுவுமில்லை. புதிய இந்திய அணிக்கு வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறினார்.