வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு மாவட்டத்தில் 23 வெசாக் தோரணங்கள் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நல்ல குணங்களைக் கொண்ட உன்னத மக்களுடன் பழகுவோம்” எனும் தொனிப்பொருளில் இந்த ஆண்டில் தேசிய வெசாக் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.
அதன்படி, இன்று சனிக்கிழமை (10) முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொழும்பு மாவட்டத்தில் உள்ள கிராண்ட்பாஸ் கொஸ்கஸ் சந்தி, ஒருகொடவத்தை, தொட்டலங்கை, பொறள்ளை, தெமட்டகொடை, பேலியகொடை, கிரிபத்கொடை, கொட்டாவை, மஹரகம, பிலியந்தலை, பெல்லன்வில, மொரட்டுவை, தெஹிவளை, மாலம்பே மற்றும் அத்துறுகிரிய ஆகிய பகுதிகளில் வெசாக் தோரணங்கள் கட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் உள்ள பௌத்தாலோக மாவத்தை, லேக் ஹவுஸ் வீதி, கொழும்பு மாநகர சபை வீதி, ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரை ஆகிய இடங்களில் வெசாக் கூடுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 7,200 வெசாக் தானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.