Sunday, March 8, 2026
spot_img
Homeஅம்பறையில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு காணாமல்போனோரில் இதுவரை 6 பேர் சடலங்களாக மீட்பு

அம்பறையில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு காணாமல்போனோரில் இதுவரை 6 பேர் சடலங்களாக மீட்பு

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகில் உழவு இயந்திரம் ஒன்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு காணாமல்போயிருந்த 6 மாணவர்கள் உட்பட 8 பேரில் 4 மாணவர்களின் சடலங்கள் புதன்கிழமை (27) மீட்கப்பட்ட நிலையில், காணாமல்போன ஏனைய இரு மாணவர்களினதும் உழவு இயந்திரத்தின் சாரதி மற்றும் உதவியாளரைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட நிலையில், மேலும் இருவரின் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன.

மீட்புப்பணிகள் நேற்று (27) இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (28) அதிகாலை மீண்டும் ஆரம்பமாகி இருந்தது.

இதன்போது நான்கு பேரில் இருவரது சடலங்களும் ஆங்காங்கே இருந்த நிலையில் மீட்புக்குழுவினரால் மீட்கப்பட்டன. அத்துடன் குறித்த இரு சடலங்களும் உழவு இயந்திர சாரதி மற்றும் உதவியாளரின் சடலங்களாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சடலங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

முன்னதாக, வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. கடந்த புதன்கிழமை (27) மாலை வரை 04 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறிப்பாக இத்தேடுதலில் மேலதிகமாக இராணுவம் விசேட அதிரடிப்படை பொலிஸார் பங்கேற்றுள்ளதுடன் தன்னார்வ இளைஞர் குழுவினரும் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்ட உழவு இயந்திரமும் மீட்கப்பட்டுள்ளன.தற்போது வரை 04 சடலங்கள் மீட்கப்பட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டிருந்தன.

பின்னர் சீரற்ற காலநிலை மற்றும் இருள் காரணமாக மறுநாள் மீட்புப்பணியினை மேற்கொள்ள தயார் செய்யப்பட்டிருந்தது.

மேலும் சடலங்களாக மீட்கப்பட்டவர்களில் முகமட் ஜெசில் முகமட் சாதீர்(வயது-16), அப்னான், பாறுக் முகமது நாஸிக்(வயது-15), சஹ்ரான்(வயது-15)ஆகியோரர் உள்ளடங்குவதுடன், தஸ்ரிப், யாசீன், ஆகிய மாணவர்களை மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.மேலும் சம்மாந்துறை நீதிமன்ற பதில் எம்.ரி சபீர் அகமட் அவர்களின் கட்டளையின் பிரகாரம் பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் – ஜவாஹிர் குறித்த சடலங்கள் மீதான மரண விசாரணை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை காணாமல் சென்ற தஸ்ரிப் என்ற மாணவனின் பாடசாலை புத்தகப் பை மீட்புக்குழுவினரால் தற்போது கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த செவ்வாய்க்கிழமை (26) நிந்தவூரில் இருந்து சம்மாந்துறை நோக்கிச் சென்ற 11 பேரை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரமே விபத்திற்குள்ளானது.

இதன்போது நிந்தவூர் காஷிபுல் உலூம் அறபுக் கல்லூரியிலிருந்து சம்மாந்துறைக்கு விடுமுறையில் சென்ற மாணவர்கள் 06 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர். இவர்கள் சம்மாந்துறையை வசிப்பிடமாகக் கொண்ட 12 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் ஆவர்.

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகே 11 பேர் பயணம் செய்த உழவு இயந்திம் வெள்ள நீரில் அகப்பட்டு தடம்புரண்ட நிலையில் அதில் பயணம் செய்தவர்கள் வெள்ள நீரில் அள்ளுண்டு காணாமல் போயினர்.

குறித்த மீட்புப்பணியில் போது அப்பகுதியில் உள்ள அதி வலு மின்கம்பத்தை பிடித்திருந்த மாணவர்கள் சிலரை மீட்புக்குழுவினர் உயிருடன் மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

மேலும், இந்த விபத்தில் 06 சிறுவர்கள் உழவு இயந்திரத்தின் சாரதி மற்றும் அவருடன் பயணித்த மற்றுமொருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு தற்போது காணாமல் போயுள்ளனர்.எஞ்சிய நான்கு பேர் இன்னும் மீட்கப்படவில்லை அத்துடன் நள்ளிரவு தாண்டியதன் காரணமாக மீட்புப்பணி இடைநடுவில் கைவிடப்பட்டது.

பின்னர் இன்று (28) காலை முதல் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.நிந்தவூர் மதரஸா பள்ளியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது வெள்ளம் காரணமாக விபத்துக்குள்ளானது என தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது.

காணாமல் போன குழந்தைகளை தேடும் பணியில் பொலிஸாரும் அப்பகுதி மக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments