Wednesday, April 2, 2025
spot_img
Homeஇந்திய செய்திகள்காஷ்மீருக்கான முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை ஏப்ரல் 19-ல் தொடக்கம்

காஷ்மீருக்கான முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை ஏப்ரல் 19-ல் தொடக்கம்

ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை ஏப்ரல் 19-ந்தேதி பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. ஜம்மு-கத்ரா-ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும்.

எனினும், ஜம்மு ரெயில்வே நிலையத்தில் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதனால் தொடக்கத்தில், கத்ரா பகுதியில் இருந்து ரெயில் சேவை செயல்படும். இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது, மொத்தம் 272 கி.மீ. தொலைவை கொண்ட உதாம்பூர்-ஸ்ரீநகர்-பாராமுல்லா ரெயில் இணைப்பு திட்டத்திற்கான பணியானது கடந்த மாதம் நிறைவடைந்தது.

கத்ரா-பாராமுல்லா இடையேயான சோதனை ரெயில் ஓட்டமும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஜனவரியில் கத்ரா மற்றும் காஷ்மீர் இடையேயான ரெயில் சேவைக்கு, ரெயில்வே பாதுகாப்பு ஆணையாளர் ஒப்புதல் அளித்து விட்டார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையால், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையேயான போக்குவரத்து நேரம் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனுடன், ஒரு நவீன மற்றும் திறன் வாய்ந்த ரெயில் சேவையானது இந்த பகுதிக்கு கிடைக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி ஜம்முவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி ஜிதேந்திரா சிங், ஏப்ரல் 19-ந்தேதி உதாம்பூருக்கு பிரதமர் மோடி வருகை தருவார். உலகின் மிக உயர்ந்த பகுதியில் அமைந்த ரெயில் பாலம் பகுதிக்கு வந்து அவர் சேவையை தொடங்கி வைப்பார்.

இதன்பின்னர், கத்ரா பகுதியில் இருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் என கூறியுள்ளார்.

காஷ்மீருக்கான நேரடி ரெயில் இணைப்புக்கான நீண்டகால தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த திட்டம் அமையும். தற்போது, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் சங்கல்தான் மற்றும் பாராமுல்லா இடையேயும் மற்றும் கத்ராவில் இருந்து நாடு முழுவதுமுள்ள பகுதிகளுக்கும் ரெயில் சேவை இருந்து வருகிறது.

ரெயில் சேவையால் காஷ்மீரை இணைக்கும் உயர் நோக்கத்துடனான இந்த திட்டம், 1997-ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டபோதும், புவியியல், வானிலை மற்றும் நிலப்பரப்பு சார்ந்த சவால்களால் அதன் பணிகள் தொடர்ந்து தாமதமடைந்து வந்தன. ஆற்றுப்படுகையில் இருந்து 359 மீட்டர் உயரம் கொண்ட ‘செனாப்’ பாலம் உள்பட பல பாலங்களை உள்ளடக்கி இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

இதில், மொத்தம் 119 கி.மீ. தொலைவை உள்ளடக்கிய 38 சுரங்க பாதைகளும் உள்ளன. அவற்றில் நாட்டின் மிக நீண்ட போக்குவரத்துக்கான சுரங்க பாதையான டி-49 என்ற 12.75 கி.மீ. நீள சுரங்க பாதையும் ஒன்றாகும். இந்த ‘செனாப்’ பாலம், பிரான்சில் உள்ள ஈபிள் கோபுரத்தின் உயரத்தில் இருந்து கூடுதலாக 35 மீட்டர் உயரம் கொண்டது. இந்த பாலம், உலகின் மிக உயர்ந்த ரெயில் பாலம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments