கொழும்பில் ஷிரான் பாசிக்கின் ஐந்து ஹோட்டல்கள்! 2012 வெலிக்கடை சிறைக் கலவரத்திலும் தொடர்பு
கைது செய்யப்பட்ட முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் சொத்துக்கள் குறித்த தகவல்கள் விசாரணையின் போது வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
கொழும்பு மரைன் டிரைவ் பகுதியில் தனக்கு ஐந்து ஹோட்டல்கள் சொந்தமாக இருப்பதாக சந்தேக நபர் விசாரணையின் போது கூறியுள்ளார்.

அவரது சொத்துக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் குறித்து விசாரணை குழுக்கள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன
2012 வெலிக்கடை சிறைக் கலவரம்
இந்த நிலையில், சந்தேக நபரை 72 மணி நேரம் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், அந்த விசாரணையை கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மேற்கொண்டுவருகிறது.
நாட்டை விட்டு தப்பிச் சென்று துபாயில் பதுங்கியிருந்த ஷிரான் பாசிக் கைது செய்யப்பட்டு நேற்று இரவு (15) இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.
இந்த நிலையில், நாட்டின் சிறைச்சாலைகளில் சமீபத்தில் நடந்த மோதல்களில் அவருக்கு ஏதேனும் தொடர்பு இருந்ததா என்பது குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதே வேளை, 2012 வெலிக்கடை சிறைக் கலவரத்துடன் அவரை தொடர்புபடுத்தும் தகவல்களும் வெளியாகியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன


