இந்தோனேசியாவில் இன்று (15) அதிகாலை ஏற்பட்ட ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல தொடர் நில அதிர்வுகளும் பதிவாகியுள்ளதாக இந்தோனேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தோனேசியாவின் மத்திய தீவுக்கூட்டத்திற்கு அருகில் இன்று (15) அதிகாலை 3.28 மணியளவில் ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டிருந்தது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரிக்டர் அளவில் 5.9, 5.6 மற்றும் 6.1 ஆகிய அளவுகளில் 3 தொடர் நில அதிர்வுகளும் பதிவாகியிருந்ததையடுத்து, அந்நாட்டின் தேசிய புவியியல் மையம் சுனாமி எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தது.
எனினும், பின்னர் அந்த சுனாமி எச்சரிக்கை அறிவிப்பைத் திரும்பப் பெற அந்நாட்டின் தேசிய புவியியல் மையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட சுனாமி எச்சரிக்கையை அடுத்து இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களமும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதில், நிலநடுக்கத்தினால் அந்நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், இதனால் இலங்கைக்கு எவ்வித தாக்கமும் இல்லை எனக் குறிப்பிட்டிருந்தது.
அதன்படி, இலங்கைக்கு இதனால் எவ்வித ஆபத்தும் இல்லை எனத் தெரிவித்துள்ள வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்எச்சரிக்கை மையம், நாட்டின் கடலோரப் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதுகாப்பாக உள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளது.


