கடற்பகுதிகள் காற்றின் வேகம் அதிகரிக்கும்
மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதன்படி, சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இதனிடையே, சிலாபத்திலிருந்து கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பொத்துவில் வரையான கரையோரப் பகுதிகளில் கடல் அலைகள் 2 முதல் 2.5 மீற்றர் உயரம் வரை எழக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து மன்னார், புத்தளம், சிலாபம் வரையான கடற்பகுதிகளிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளிலும் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 55 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

இதனால், குறித்த கடற்பகுதிகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் என்பதால், மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


