இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான எல்லை தாண்டிய அத்துமீறல் மற்றும் சட்டவிரோத அடிமடி இழுவை மீன்பிடி நடவடிக்கைகளைக் கண்டித்து, யாழ்ப்பாணம் – தீவகப் பகுதி மீனவர்கள் இன்று கடலில் இறங்கி கறுப்புக்கொடி ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிகட்டுவான் இறங்குதுறை கடற்பகுதியில் படகுகளில் கடலுக்குள் சென்ற தீவக மீனவர்கள், கறுப்புக்கொடிகளை ஏந்தித் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன், ஜனாதிபதிக்கு உடனடியாக நடவடிக்கை கோரி அவசரக் கோரிக்கை மனுவையும் கையளித்தனர்.
காரைக்கால், நாகப்பட்டினம் மற்றும் தொண்டி பகுதிகளைச் சேர்ந்த இந்திய இழுவை மடி விசைப்படகுகள், கடந்த ஜூலை 16 முதல் 18 ஆம் திகதி வரை மூன்று நாள்களில் மட்டும், தீவகத்தைச் சேர்ந்த 200 இற்கும் மேற்பட்ட பாரம்பரிய மீனவர்களின் 5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நண்டு வலைகளை இழுத்தழித்து சேதப்படுத்தியுள்ளன என்று மீனவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்தத் தொடர்ச்சியான அத்துமீறல்களால் வடக்கின் கடல்சார் பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் இலங்கையின் கடல்வள உரிமைகள் கடுமையான அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.
ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட மனுவில்
இடம்பெற்றுள்ள முக்கிய கோரிக்கைகள்
01. சட்டவிரோத மீன்பிடித்தடை: இலங்கைக் கடற்பரப்பிற்குள் வெளிநாட்டு இழுவைப் படகுகள் மேற்கொள்ளும் அடிமடி இழுவை மீன்பிடியைத் தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.
02. பாரம்பரிய உரிமைகள் பாதுகாப்பு: பாரம்பரிய மீனவர்களின் மீன்பிடிப் பகுதிகளைப் பாதுகாப்பதுடன், கடல் உயிரினப் பல்வகைமை மற்றும் நீலப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்.
03. சமமான சட்டப் பாதுகாப்பு: வடக்கு மக்களுக்கும் நாட்டின் ஏனைய மக்களைப் போன்று சமமான சட்டப் பாதுகாப்பும் அரசின் உரிய கவனமும் வழங்கப்பட வேண்டும்.
04. இராஜதந்திர தலையீடு: இலங்கை – இந்திய இராஜதந்திர உறவுகளின் பெயரில் வடக்கு மக்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பலியிடப்படுவதை அனுமதிக்க முடியாது என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
“வடக்கின் பாரம்பரிய கடல்சார் வாழ்க்கை மரபு அழிந்துவிட்டால் அது முழு இலங்கைக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். மௌனத்தைவிட துணிவையும், தற்காலிக வசதியைவிட நீதியையும் தேர்ந்தெடுக்கும் தலைவராக ஜனாதிபதி இதில் உறுதியான தீர்வை வழங்க வேண்டும்” என்றும் தீவக மீனவர்கள் அந்த மனுவில் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


