யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 30ஆம் நாள் அகழ்வின் போது, இன்று ஞாயிற்றுக்கிழமை புதிதாக 11 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதில் 9 என்புத் தொகுதிகள் ஒன்றோடு ஒன்று தொடுகையுற்ற (ஒன்றின் மேல் ஒன்றாக) நிலையில் காணப்படுகின்றன.
இன்று அடையாளம் காணப்பட்ட 11 என்புத் தொகுதிகளும் முறையாகச் சுத்தம் செய்யப்பட்டு, தடயவியல் விதிகளின்படி இலக்கமிடப்பட்டுள்ளன.
அத்துடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த என்புத் தொகுதிகளில் மேலும் 7 மனித என்புத் தொகுதிகள் இன்று முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத் தளம் ஒன்று மற்றும் இரண்டிலிருந்து இதுவரை மொத்தமாக 405 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 377 என்புத் தொகுதிகள் இதுவரை முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


