Friday, June 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்எல்-நினோ தாக்கத்தை எதிர்கொள்வது குறித்து ஆராய்வு

எல்-நினோ தாக்கத்தை எதிர்கொள்வது குறித்து ஆராய்வு

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல்-நினோ காலநிலை நிலைமையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் அதனை எதிர்கொள்வதற்காக நிறுவனங்கள் கொண்டுள்ள திட்டங்கள் குறித்து ஆராயும் கலந்துரையாடலொன்று, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

வளிமண்டலவியல் திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகார சபை, மகாவலி அதிகார சபை, அனர்த்த முகாமைத்துவ நிலையம், மின்சார உற்பத்தி லங்கா தனியார் நிறுவனம் மற்றும் தேசிய கட்டமைப்பு செயற்பாட்டு தனியார் நிறுவனம் உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல்-நினோ நிலைமையானது நாட்டின் உணவுப் பாதுகாப்பு, குடிநீர் மற்றும் வலுசக்தி ஆகிய துறைகளில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் மற்றும் அந்தத் துறைகளை முகாமைத்துவம் செய்வதற்காக எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

இதன்கீழ், தற்போதுள்ள நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவினை விவசாயம், குடிநீர் மற்றும் வலுசக்தி துறையில் ஏற்படக்கூடிய அழுத்தங்களை முகாமைத்துவம் செய்யும் வகையில் பயன்படுத்துவது குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

இந்த முறை ஏற்படும் எல்-நினோ நிலைமையானது 2016-2017 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட நிலைமைக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கக்கூடும் என இங்கு சுட்டிக்காட்டிய அதிகாரிகள், அதற்கேற்ப விசேடமாக நீர் முகாமைத்துவத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இதன்கீழ், 2026 ஆம் ஆண்டின் சிறுபோக விவசாய நடவடிக்கைகளை சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்னதாகவே ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

ஏற்படக்கூடிய சூழ்நிலைக்கு மத்தியில் எதிர்வரும் சில மாதங்களில் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்தல், விவசாய நடவடிக்கைகள் மற்றும் உணவுப் பாதுகாப்பைப் பேணுதல் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதோடு மின் உற்பத்தி மற்றும் எதிர்வரும் சிறுபோகத்திற்குத் தேவையான நீரை வழங்குதல், குடிநீர் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றுக்கான தேவையான திட்டங்களைத் தயாரித்து சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

‘டித்வா’ சூறாவளி மற்றும் மத்திய கிழக்கு யுத்த சூழ்நிலைக்கு மத்தியில் ஏற்பட்ட சவால்களை எதிர்கொண்டதைப் போன்றே, வெளிப்புற சவாலான இந்த உலகளாவிய நிலைமையையும் முகாமைத்துவம் செய்ய முடியும் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, முறையான திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் மூலம் ஏற்படக்கூடிய எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள முடியும் என நம்பிக்கை வெளியிட்டார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments