சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி, நடிகை சுகன்யாவுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் சுகன்யா. இயக்குநர் பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான அவர், தனது இயல்பான நடிப்பு மற்றும் பரதநாட்டியப் பின்னணியால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அறிமுகப் படத்திற்குப் பிறகு சுகன்யாவின் திரைப்பயணம் வேகமெடுத்தது.
விஜயகாந்த் ஜோடியாக சின்ன கவுண்டர், கமல்ஹாசனின் மகாநதி, சத்யராஜ் உடன் திருமதி பழனிச்சாமி, வால்டர் வெற்றிவேல் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தார். குடும்பப் பெண் கதாபாத்திரங்கள் முதல் உணர்ச்சிகரமான வேடங்கள் வரை பல்வேறு கதாபாத்திரங்களில் தனது திறமையை நிரூபித்தார்.
குறிப்பாக இயக்குநர் ஷங்கரின் இந்தியன் திரைப்படத்தில் வயதான பெண்ணாக நடித்த அவரது தோற்றமும் மேக்கப்பும் பாராட்டுகளை பெற்றன. தொடர்ந்து பல படங்களில் நடித்துக்கொண்டிருந்த நிலையில், திருமணத்திற்குப் பிறகு வெளிநாட்டில் குடியேறிய சுகன்யா சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்றார். அதன் பின்னர் தனியாகவே வாழ்ந்து வரும் அவர், தற்போது ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், 1996 ஆம் ஆண்டு சந்தனக் கடத்தல் குற்றவாளி வீரப்பனிடம் நடத்தப்பட்ட ஒரு பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் வெளியான பேட்டியில் சுகன்யா குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த பேட்டி தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானதால் தனது நற்பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டதாக சுகன்யா பின்னர் நீதிமன்றத்தை நாடினார்.
அந்த நிகழ்வால் மனஉளைச்சலும், தொழில் வாய்ப்புகளிலும் பாதிப்பும் ஏற்பட்டதாக தெரிவித்த அவர், சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனத்திடம் நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்தார். நீண்டகாலமாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இந்த வழக்கில் தற்போது முக்கிய தீர்ப்பு வெளியாகியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி, நடிகை சுகன்யாவுக்கு 10 லட்சத்து 500 ரூபா நஷ்டஈடு வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்று தசாப்தங்களுக்கு பிறகு கிடைத்த இந்த தீர்ப்பு, சுகன்யாவுக்கு சட்டரீதியான நியாயம் கிடைத்ததாக பார்க்கப்படுகிறது.


