ஈரானின் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி (Ali Larijani) இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் செவ்வாய்க்கிழமை (17) தெரிவித்தார்.
ஈரானின் சக்திவாய்ந்த தேசிய பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானியை குறிவைத்து இஸ்ரேல் நள்ளிரவில் தாக்குல் நடத்தியதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் முற்றிலும் தன்னார்வலர்களைக் கொண்ட பசிஜ் படையின் தலைவர் குலாம் ரெசா சுலைமானியையும் கொன்றுவிட்டதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்தது.
86 வயதான உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனியைக் கொன்ற பெப்ரவரி 28 தாக்குதலுக்குப் பின்னர் இந்தக் கொலைகள் மீண்டும் ஈரானிய இறையாட்சியிலிருந்து உயர்மட்டத் தலைவர்களை காவு கொண்டுள்ளது.
எனினும், இது தொடர்பாக ஈரானிடமிருந்து எந்த உறுதிப்படுத்தலும் வரவில்லை.
அலி லாரிஜானி ஈரான் அரசியலில் நீண்டகால அனுபவமும் செல்வாக்கும் கொண்ட ஒரு முக்கியத் தலைவராவார்.
அலி லாரிஜானி 2025 ஆகஸ்ட் மாதம் ஈரானின் தேசிய பாதுகாப்பு உயர் சபையின் (SNSC) செயலாளராக அதிபர் மசூத் பெசெஷ்கியனால் நியமிக்கப்பட்டார்.
அத்துடன், ஈரானின் மறைந்த உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியின் பிரதிநிதியாகவும், அவருக்கு ஆலோசனைகளை வழங்கும் ஆலோசகராகவும் அவர் செயற்பட்டு வந்தார் .
2008 மே முதல் 2020 மே வரை தொடர்ந்து 12 ஆண்டுகள் ஈரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகராகப் பணியாற்றினார்.
2005 முதல் 2007 வரை ஈரானின் தலைமை அணுசக்தி பேச்சுவார்த்தையாளராகச் சர்வதேச அளவில் ஈரானைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
ஆரம்பத்தில் தீவிர பழமைவாதக் கொள்கை (Principlist) கொண்டவராக அறியப்பட்டாலும், அண்மைக்காலமாக அவர் ஒரு “மிதவாத பழமைவாதி” (Moderate Conservative) என்றே வர்ணிக்கப்படுகின்றார்.
அலி லாரிஜானியின் சகோதரர் சாதிக் லாரிஜானி என்பவரும் ஈரானின் மிக உயரிய அதிகார அமைப்பான ‘நிர்ணய சபை’யின் (Expediency Council) தலைவராகச் செல்வாக்கு மிக்கவராக விளங்குகின்றார்.
ஈரான் நாடாளுமன்றத்திற்கும் பாதுகாவலர் சபைக்கும் (Guardian Council) இடையிலான சட்டச் சிக்கல்களைத் தீர்த்து வைக்கும் இறுதி அதிகார மையமாக இந்தச் சபை செயற்படுகின்றது.


