பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவை (NHS) எதிர்நோக்கும் நீண்ட காத்திருப்பு நேரங்கள் காரணமாக, மக்கள் அதிகளவில் தனியார் மருத்துவ சேவைகளை நாடி வருவதாக அந்நாட்டின் நோயாளி நல கண்காணிப்பு அமைப்பான ‘Healthwatch England’ எச்சரித்துள்ளது.
பிரித்தானியாவில் அறுவை சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகளுக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியுள்ளதால், மக்கள் தங்கள் சொந்தப் பணத்தைச் செலவழித்து தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்லும் போக்கு அதிகரித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில், தனியார் சேவைகளைப் பயன்படுத்துவோரின் விகிதம் 9% இலிருந்து 16% ஆக உயர்ந்துள்ளது.
இதில் நான்கு பேரில் ஒருவர் நீண்ட காத்திருப்பு நேரத்தையே இதற்கான முக்கிய காரணமாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலைமை சமூகத்தில் ஒரு ‘இரு அடுக்கு’ (Two-tier) சுகாதார முறையை உருவாக்குவதாகக் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
அதிக வருமானம் ஈட்டுபவர்கள் 35% பேர் தனியார் சிகிச்சையைப் பெற்றுள்ள நிலையில், குறைந்த வருமானம் பெறுபவர்களில் 10% பேர் மட்டுமே இதனை அணுக முடிந்துள்ளது.
இதனால் பணம் உள்ளவர்களுக்கு விரைவான சிகிச்சையும், மற்றவர்களுக்கு நீண்ட காத்திருப்பும் என்ற நிலை உருவாகியுள்ளது.
பல நோயாளிகள் தங்களது நோய் கண்டறியும் சோதனைகளை (Scans & Tests) மட்டும் தனியார் துறையில் விரைவாக முடித்துவிட்டு, அந்த முடிவுகளுடன் மீண்டும் தேசிய சுகாதார சேவை திரும்புகின்றனர்.
இதன் மூலம் தங்களது சிகிச்சைக்கான முன்னுரிமையைப் பெற அவர்கள் முயற்சிக்கின்றனர்.
தனியார் துறையில் 48 மணிநேரத்திற்குள் ஒரு ஸ்கேன் பரிசோதனையைச் செய்ய முடிவதே இதற்குக் காரணமாகும்.
இதேவேளை, தற்போது 10-இல் 4 நோயாளிகள் 18 வாரங்களுக்கும் மேலாக மருத்துவமனை சிகிச்சைக்காகக் காத்திருக்கின்றனர்.
காத்திருப்புப் பட்டியலைக் குறைக்கவும், தாமதங்களைத் தவிர்க்கவும் தேவையான மேம்பாடுகளைச் செய்து வருவதாகப் பிரித்தானிய சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.


