கனேடிய குடியுரிமைத் தேர்வு தொடர்பில் கனடா அரசு சில மாற்றங்களைச் செய்துள்ளது.கனேடிய குடியுரிமைக்கு விண்ணப்பிப்போர், ஒன்லைனில் எழுதும் குடியுரிமைத் தேர்வு தொடர்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
கோவிட் காலகட்டத்துக்கு முன், குடியுரிமைத் தேர்வு எழுத 30 நிமிடங்கள் கொடுக்கப்பட்டுவந்த நிலையில், தற்போது தேர்வெழுதும் நேரம் 45 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், முதல் முறை தேர்வில் வெற்றிபெறவில்லை என்றால், மேலும் இரண்டு முறை என, மொத்தம் மூன்று வாய்ப்புகள் தேர்வெழுதுவோருக்குக் கொடுக்கப்பட உள்ளது.
தேர்வு எழுதுவோர், 20 கேள்விகளுக்கு பதிலளிக்கவேண்டும். அவற்றில் 15 கேள்விகளுக்காவது சரியான பதில் எழுதவேண்டும்.
முன்பு, குடியுரிமைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், அடுத்ததாக, குடியுரிமை அதிகாரி ஒருவரின் முடிவின் பேரில், குடியுரிமை பெறும் விழாவில் பங்கேற்கலாம் என வழிகாட்டும் நெறிமுறைகளில் கூறப்பட்டிருந்தது.
இப்போது, அதிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதாவது, ஒருவர் குடியுரிமைத் தேர்வில் வெற்றிபெற்றாலும், அவர் குடியுரிமை பெறுவதற்கான மற்ற தேவைகளை சந்தித்துள்ளாரா என குடியுரிமை அதிகாரிகள் மேற்கொண்டு சோதனைகள் மேற்கொள்ள முடியும்.
அத்துடன், குடியுரிமை பெறுவதற்கான தகுதிநிலைகளில், ஒரே ஒரு தேவை சந்திக்கப்படவில்லை என்றால் கூட, அந்த நபருடைய விண்ணப்பத்தை குடியுரிமை அதிகாரிகள் நிராகரிக்கமுடியும்.


