உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மற்றும் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் கைது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார்.
2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள், அரசியல் எதிர்ப்பாளர்களை இலக்கு வைத்தோ அல்லது பூகோள அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைவாகவோ முன்னெடுக்கப்படக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது குறித்துத் தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தற்போதைய அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தாலும், விசாரணைகளின் தற்போதைய போக்கு அதன் நம்பகத்தன்மை குறித்துப் பாரிய கேள்விகளை எழுப்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நியாயமான, வெளிப்படையான மற்றும் பக்கச்சார்பற்ற முறையில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு விசாரணைக்கும் தான் முழுமையான ஆதரவை வழங்குவதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த மிலேச்சத்தனமான தாக்குதலுக்குப் பின்னால் உள்ள உண்மையான சூத்திரதாரிகளைக் கண்டறிந்து அவர்களுக்குச் சட்டப்படி தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை குறித்துக் கருத்துத் தெரிவித்த நாமல், அவர் ஒரு கௌரவமான இராணுவ அதிகாரி எனப் பாராட்டியுள்ளார். முப்பது ஆண்டுகால உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் அவர் ஆற்றிய சேவை மகத்தானது என்றும், திட்டமிட்ட அரசியல் அழுத்தங்கள் மூலமே அவர் மீது போலியான கதைகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தாக்குதலைத் தடுக்கத் தவறிய மற்றும் தமது கடமைகளைச் செய்யத் தவறிய உண்மையான நபர்கள் மீது இவ்வாறான தீவிர விசாரணைகள் நடத்தப்படவில்லை என நாமல் ராஜபக்ச அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
அரசியல் தேவைகளுக்காக இராணுவ அதிகாரிகளைப் பலிக்கடாவாக்குவது தேசிய பாதுகாப்பிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.


