‘டிட்வா’ சூறாவளி பின்னர் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் நிறுவப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்தின் முகாமைத்துவக் குழு கூடி ஆராய்ந்துள்ளது.
நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமையில், ஜனாதிபதி அலுவலகத்தில் இந்தக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
சூறாவளியால் சேதமாகிய அனைத்துத் துறைகளையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்குத் தேவையான நிதியைத் தொடர்ந்தும் திரட்டுவது குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி, நிதி திரட்டுதல் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய மூலோபாய நடவடிக்கைகள் குறித்தும், வெளிநாட்டுத் தூதுவர்கள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களை தொடர்புபடுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதில் நாட்டிலுள்ள அரச, தனியார் நிறுவனங்கள் மற்றும் தனி ஆட்களிடமிருந்து ஆதரவைப் பெறுவது உட்பட பல்வேறு விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.


