Wednesday, March 11, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்வெளிநாட்டு யுவதிக்கு பாலியல் தொந்தரவு புரிந்த நபர் கைது

வெளிநாட்டு யுவதிக்கு பாலியல் தொந்தரவு புரிந்த நபர் கைது

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் வெளிநாட்டு யுவதி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டுத் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினர் இன்று (16) கல்முனை, மருதமுனை பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 25 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஆவார். இவரும் இவரது மனைவியும் திருகோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாடகை அடிப்படையில் பல வீடுகளில் வசித்து வந்துள்ளனர்.

குறித்த வீடியோ மற்றும் அது தொடர்பான தகவல் ஊடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் பரவிய நிலையில், இந்தச் சந்தேகநபர் திருக்கோவில் பிரதேசத்தில் கடலை விற்பனையாளர் என்று சமூக ஊடகங்களில் தகவல் ஒன்று பரவியுள்ளது.

அதன்படி, திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டனர். பின்னர் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் வசித்த இடங்கள் பலவற்றிற்குச் சென்று தேடுதல் நடத்தப்பட்டது.

அப்போது ஒரு இடத்தில் சந்தேகநபர் மற்றும் அவரது மனைவியின் தேசிய அடையாள அட்டைகளின் நிழற்பிரதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதன் அடிப்படையில், அவரது மனைவியின் வீட்டிற்குச் சென்ற பொலிஸ் குழுவினர், குறித்த சந்தேகநபர் மூன்று நாட்களுக்கு முன்னர் தான் தங்கியிருந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதைக் கண்டறிந்தனர்.

இதனையடுத்து, அவர் நடமாடக்கூடிய இடங்கள் குறித்து மேற்கொண்ட தேடுதலின் போது, சந்தேகநபர் இன்று மாலை கல்முனை, மருதமுனை பிரதேசத்தில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்படும் போது அவர் தலையை மொட்டையடித்து தனது தோற்றத்தை மாற்றிக் கொண்டிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளுக்காகச் சந்தேகநபர் பொத்துவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாக உலகளவில் அதிக கவனத்தைப் பெறுவதற்கு, நமது அழகான சுற்றுச்சூழலும், இங்குள்ள மக்களின் விருந்தோம்பலும் காரணம்

இருப்பினும், சில கட்டுப்பாடு இல்லாத நபர்கள் காரணமாக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இங்கு அசௌகரியங்களை எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்களும் அதிகமாக உள்ளன.

அத்தகைய ஒரு சம்பவத்தைக் காட்டும் வீடியோ ஒன்று அண்மைக்காலமாகச் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அதில், முச்சக்கர வண்டியை ஓட்டிச் செல்லும் வெளிநாட்டுப் பெண் ஒருவருக்கு ஒருவர் தனது பாலியல் உறுப்பைக் காட்டும் விதம் காட்டப்பட்டுள்ளது.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், அந்தச் சம்பவத்தைச் சந்தித்த 24 வயதுடைய நியூசிலாந்துப் பிரஜை ஒருவரால் நேற்று (15) பிற்பகல் சுற்றுலாப் பொலிஸ் பிரிவுக்கு மின்னஞ்சல் மூலம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, திருக்கோவில் பொலிஸாரும் பொத்துவில் பொலிஸாரும் இணைந்து சந்தேகநபரைத் தேடும் விசாரணையை ஆரம்பித்திருந்தனர்.

விசாரணைகளின்போது, கடந்த செப்டெம்பர் மாதம் இலங்கைக்கு வந்த குறித்த நியூசிலாந்து யுவதி, ஒக்டோபர் 25 ஆம் திகதி அறுகம்பையில் இருந்து பாசிக்குடாவிற்கு முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது, திருக்கோவில் பிரதேசத்தில் இந்த நபரைச் சந்தித்து அவருடன் பேசியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

குறித்த நபர் இந்த அநாகரிகச் செயலை அந்தச் சமயத்தில்தான் செய்துள்ளார்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments