சுதந்திரத்திற்கு முன் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தங்கி வாழ்ந்த பங்களா, தில்லியில் ரூ.1,100 கோடிக்கு விற்பனையாகிறது. இதற்கான சட்டபூர்வ பதிவு நடைமுறைகள் இறுதி கட்டத்தில் உள்ளன.
20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர் எட்வின் லூட்யன்ஸ் வடிவமைத்த தில்லி பகுதியில் சுமார் 3,000 பங்களாக்கள் உள்ளன. அதில் 600க்கும் மேற்பட்டவை தனியார் உரிமையாளர்களுக்குச் சொந்தமானவை. அவற்றில் ஒன்றான நேரு வாழ்ந்த பங்களாவை பிரபல மென்பானம் தயாரிப்பு நிறுவன அதிபர் வாங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பங்களா 3.7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 24,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள மூன்று தளங்களைக் கொண்ட இக்கட்டிடம் பரந்து விரிந்த புல்வெளிகள், உயரமான உட்கூரைகள், தேக்கு மரத்தால் செய்யப்பட்ட தூண்கள் போன்ற தனித்துவ அம்சங்களைக் கொண்டது.
சுதந்திரத்திற்கு முன் நேரு தங்கியிருந்த இந்த வீதி ‘யார்க் சாலை’ என அழைக்கப்பட்டது. சுதந்திரத்துக்குப் பிறகு அந்த சாலை மோதிலால் நேரு மார்க் என பெயர் மாற்றப்பட்டது. 1948 ஆம் ஆண்டு நேரு, தீன்மூர்த்தி ஹவுஸ் பங்களாவுக்கு குடியேறினார். 1964 ஆம் ஆண்டு மறையும் வரையில் அவர் அங்கிருந்தே வாழ்ந்தார்.
இந்த பங்களா, சுதந்திர இந்தியாவின் ஆரம்பகால நிகழ்வுகளுக்கு சாட்சியாய் விளங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடமாகும்.


