இலங்கையில் தற்போது தனிப்பட்ட பழிவாங்கல், ஒழுக்கமின்மை மற்றும் தொழில்முறை இல்லாத காரணங்களால் “அரசியல் பயங்கரவாதம்” நடைபெறுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் தலைவர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள் மற்றும் பிற சலுகைகளை நீக்கும் 2025 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க ஜனாதிபதியின் சலுகைகள் சட்டம் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, விஜேராமவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்த பின்னரே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில்,
“எனது மூத்த மகன் நாமல் கூறியது போல், எல்லாம் தொடங்கிய எனது கிராமத்திற்கு நான் திரும்பிவிட்டேன். நாம் கட்டிய தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வழியாக இங்கு பயணம் செய்தேன்; இப்போது கிராமத்தில் புளித்த மீன் குழம்பை ருசிக்க முடியும்,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியல் எதிர்ப்பாளர்கள் தமது திறமையின்மையை மறைக்க முயற்சிப்பதாகவும், அவர்களிடம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
“மஹிந்த ராஜபக்ஷவை தூக்கிலிட வேண்டும் என்று கூறும் அறிக்கைகளைக் கேட்டேன். ஆனால் நான் வாழும் வரையிலும், நாம் அனைவரும் சிங்கக் கொடியின் கீழ் வாழும் வரையிலும், இந்த ஒற்றையாட்சி தாயகத்திற்கு துரோகம் செய்யும் எவருக்கும் எதிராக – எவ்வளவு துன்பம் வந்தாலும் – நான் எழுவேன்,” என்று அவர் வலியுறுத்தினார்.
மக்களும், மகாசங்கமும் தேவையான தியாகத்தைச் செய்யத் தயாராக இருப்பார்கள் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
அரசியல் அச்சுறுத்தல்களும் உரத்த விமர்சனங்களும் தமக்கு புதிதல்ல என்றும் மஹிந்த ராஜபக்ஷ தனது அறிக்கையில் தெளிவுபடுத்தினார்.


