அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் (31) சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உட்டா பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடம் துப்பாக்கி வன்முறையை எதிர்த்து பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென அவரது கழுத்தில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. ரத்தம் பீறிட்டு மேடையில் சரிந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அறுவை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சார்லி கிர்க்கின் கொலையில் சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடித்து தண்டிக்கப்படும் என டொனால்ட் டிரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபரின் படங்களை FBI வெளியிட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள பகுதியில் இருந்து உயர் சக்தி கொண்ட துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாகவும், கைரேகைகள் மற்றும் காலடிச்சுவடுகள் விசாரணைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகவும், குற்றவாளி கல்லூரி மாணவர் வயதுடையவர் போலத் தோன்றுவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபரைப் பற்றிய தகவல்களை வழங்குவோருக்கு 100,000 அமெரிக்க டாலர் (சுமார் 88 லட்சம் ரூபாய்) பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.


