கனடாவின் ரொறன்ரோவில் உள்ள பார்க்சைட் டிரைவ் பகுதியில் பொருத்தப்பட்ட வேகக் கட்டுப்பாட்டு கேமரா, ஓராண்டிற்குள் ஏழாவது முறையாக சேதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சமீபத்திய சம்பவம் கடந்த சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலைக்கு இடையில் இடம்பெற்றதாகவும், இதை சேதப்படுத்தும் செயலாகக் கருதி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
குறித்த கேமரா, 2021ஆம் ஆண்டு அப்பகுதியில் நிகழ்ந்த பாரதூரமான விபத்துக்குப் பிறகு நிறுவப்பட்டது. இதுவரை அது 68,000க்கும் மேற்பட்ட அபராத சீட்டுகளை வழங்கியுள்ளது. ஒருமுறை, மணிக்கு 154 கி.மீ. வேகத்தில் சென்ற வாகனத்தை கூட பதிவு செய்துள்ளது. இது அப்பகுதியின் வேக வரம்பை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகமாகும்.
சமீப காலங்களில் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வரும் இந்த கேமரா, ரொறன்ரோவில் அதிகம் சேதமடைந்த கேமராக்களில் ஒன்றாக மாறியுள்ளது. ஒருமுறை இந்த கேமரா ஒரு குளத்துக்குள் கூட வீசப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.


