எல்ல வெல்லவாய பள்ளத்தாக்கில் விபத்துக்குள்ளான பேருந்தில் இருந்தவர்களை மீட்கச் சென்ற இராணுவ அதிகாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இராணுவத்தின் இரண்டாவது சிறப்புப் படையை சேர்ந்த அதிகாரியே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
எல்ல பகுதியைச் சேர்ந்த அவர் விடுமுறை காரணமாக வீட்டுக்கு சென்றுக் கொண்டிருந்த நிலையில், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

1000 அடிக்கும் அதிகமான பாறையில் கவிழ்ந்திருந்த பேருந்தில் இருந்தவர்களை மீட்பதற்காக பிரதேச மக்களுடன் சேர்ந்து குறித்த இராணுவ அதிகாரியும் கீழே சென்றுள்ளார்.
இதன்போது, அங்கிருந்த சரிந்து விழுந்த கல்லொன்று அவரது முகத்தில் விழுந்துள்ளது.

இந்நிலையில், காயமடைந்த அவர் பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதனையடுத்து சம்பவத்தில் உயிர்தப்பிய ஒருவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நான் சாரதிக்கு அருகில் இயந்திரத்தின் மேல் சட்டத்தில் அமர்ந்து வந்தேன்.

அப்போது சாரதி தடை ஆழி சரியாக இயங்கவில்லை என்று கூறினார். அதற்கு நடத்துனர் உட்பட அங்கிருந்த சிலர் கேலி செய்ய வேண்டாம் என்று கூறி சிரித்தனர்.
எவ்வாறாயினும் இரண்டாவது வளைவு வரும் போது மீண்டும் அதே விடயத்தை சாரதி கூறி முடிப்பதற்குள் முன்னாள் வந்த ஜீப் வாகனத்துடன் நாம் பயணித்த பேருந்து மோதுண்டு பள்ளத்தில் கவிந்தது.

என்ன நடந்தது என்று சூதாரிப்பதற்குள் எனக்கு மயக்க நிலை ஏற்பட்டது. பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்தான். நான் காயமடைந்து உயிர் பிழைத்திருக்கின்றமை தெரியவந்தது” என்று தெரிவித்தார்.





