நாட்டில் உள்ள 1,60,200 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு விரைவில் நற்செய்தி காத்திருக்கிறது. அவர்களுக்காக 5,000 ரூபா பெறுமதியான உணவுப் பொதிகளை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், இந்த திட்டம் வரும் டிசம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவித்தார். இதற்கென அரசாங்கம் 1,500 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் அஸ்வெசும பயனாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி தேர்தல் காரணமாக வழங்கப்படாமல் போனது. அதே நிதி தற்போது கர்ப்பிணித் தாய்மார்களுக்காக பயன்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் மொத்தம் 2 லட்சத்து 80 ஆயிரம் கர்ப்பிணித் தாய்மார்கள் உள்ளனர். இதில் போசாக்கு குறைவாக காணப்படும் தாய்மார்கள் முதன்மையாகத் தெரிவு செய்யப்படுவார்கள்.
உணவுப் பொதிகள் கர்ப்ப காலத்தில் ஆறு மாதங்களுக்கு, பாலூட்டும் காலத்தில் நான்கு மாதங்களுக்கு, மொத்தம் பத்து மாதங்களுக்கு வழங்கப்படும்.
“கடந்த கால அரசாங்கங்களில் ஒதுக்கப்பட்ட நிதி தலைவர்களிடம் சென்றுவிட்டது. ஆனால் எங்கள் அரசாங்கம் எப்போதும் மக்களின் நலனையே முன்னிலைப்படுத்தும்” எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


