கேரளாவின் வயநாடு மாவட்டம் கலியடி பகுதியை சேர்ந்தவர் சுகுமாரன் (வயது 38). இவருக்கும் ரேஷ்மா (வயது 32) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்குமுன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு குழந்தை ஒன்று உள்ளது.
இதனிடையே, நர்சிங் படித்திருந்த சுகுமாரன் இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் வேலை பார்த்து வந்தார். அவர் அங்கு 80 வயது மூதாட்டி ஒருவருக்கு கேர் கிவ்வராக (மருத்துவ பராமரிப்பாளர்) வேலை செய்து வந்தார். ஆனால், கடந்த ஜுலை மாதம் ஜெருசலேமில் தான் பணியாற்றி வந்த வீட்டில் சுகுமாரன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் கேர் கிவ்வராக இருந்த மூதாட்டியும் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இதையடுத்து, சுகுமாரனின் உடல் கேரளாவுக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. கணவன் உயிரிழந்த சம்பவத்தால் ரேஷ்மா மிகுந்த மனவேதனை அடைந்தார். மன ரீதியில் பாதிக்கப்பட்ட ரேஷ்மா மனநல சிகிச்சையும் பெற்று வந்தார்.
இந்நிலையில், கணவன் மறைவால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த ரேஷ்மா தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அவரை ஆபத்தான நிலையில் மீட்ட குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி ரேஷ்மா நேற்று (31)காலை உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


