நமது நிருபர்
கடந்த வாரம் ஏற்பட்ட டிட்வா புயலானது இலங்கை நாட்டில் பேரிழப்பை ஏற்படுத்தியது. இதனால் அந்த மக்கள் வீடுகள், உடைமைகள், அத்தியாவசிய பொருட்களை இழந்தனர்.
இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் மத்திய அரசு இந்திய கடற்படை மூலம் நிவாரண பணிகளை மேற் கொண்டது. அதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் தமிழகத்தில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து இன்று (6) 300 டன் நிவாரண பொருட்கள் இந்திய கடற்படை SWL50t 100M என்ற கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டன.
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து தமிழ்நாடு அரசின் சார்பில், ‘டிட்வா’ புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் பருப்பு, சர்க்கரை, பால் பவுடர் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை இலங்கை நாட்டிற்கு கப்பலில் அனுப்பும் பணியை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் கே.இளம்பகவத் தலைமையில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இது குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறும் போது, டிட்வா புயல் தாக்குதலால் பேரழிவு ஏற்பட்டது.
தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் அங்குள்ள மக்களுக்கு உதவி புரியும் வண்ணம் சென்னை, தூத்துக்குடி சேர்த்து 945 மெட்ரிக் டன் 7 கோடியே 65 லட்சம் மதிப்பிலான பொருட்களும், தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து மட்டும் 300 மெட்ரிக் டன் சீனி, பருப்பு, பால் பவுடர் போன்ற பொருட்கள் தூத்துக்குடி வ உ சி பொருட்கள் துறைமுகத்திலிருந்து 3 நேவி கப்பல்களில் அனுப்பப்படுகிறது என்றார்.
அவருடன் ஐ எம் எஸ் கட்டபொம்மன் கடற்படை கம்ப்யூட்டர் அனில் குமார், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.





