சுமார் 5,000 அமெரிக்க கடற்படை வீரர்களுடன் USS Abraham Lincoln விமானம் தாங்கி கப்பல் தாய்லாந்தின் Laem Chabang துறைமுகத்தை சென்றடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
200 நாட்களுக்கும் மேலாக நீண்ட கடற்படை பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க கடற்படை வீரர்களுக்கு ஓய்வு மற்றும் புத்துணர்வு அளிக்கும் வகையில், தாய்லாந்தின் பட்டாயா உள்ளிட்ட கரையோர பகுதிகளில் நேரம் செலவிட அனுமதி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலா வர்த்தகத்திற்கு ஊக்கம்
அமெரிக்க வீரர்களின் வருகையால் பட்டாயாவில் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள், பார்கள், கடைகள் உள்ளிட்ட சுற்றுலா சார்ந்த தொழில்களுக்கு குறுகிய காலத்தில் கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு அமெரிக்க வீரரும் தினசரி சுமார் 1,000 முதல் 3,000 தாய் பாட் வரை செலவிடக்கூடும் என பட்டாயா மேயர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத பாலியல் தொழில் தொடர்பாக போலீஸ் கண்காணிப்பு
அதேவேளை, அமெரிக்க கடற்படை வீரர்களின் வருகையைத் தொடர்ந்து சட்டவிரோத பாலியல் தொழில் நடவடிக்கைகள் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் போலீசாரிடம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பட்டாயாவின் கடற்கரை பகுதிகள் மற்றும் முக்கிய இரவு நேர பொழுதுபோக்கு மையங்களில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளில், பாலியல் தொழில் தொடர்பான சந்தேகத்தின் பேரில் சுமார் 40 முதல் 50 பேர் பிடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பட்டாயாவுக்கும் அமெரிக்க ராணுவத்திற்கும் நீண்ட தொடர்பு
வியட்நாம் போர் காலத்திலிருந்தே அமெரிக்க ராணுவ வீரர்களின் ஓய்வு மற்றும் சுற்றுலா நடவடிக்கைகளுடன் பட்டாயாவுக்கு நீண்டகால தொடர்பு இருந்து வருகிறது.
இந்நிலையில், 200 நாட்களுக்கும் மேலாக கடலில் பணியில் இருந்த USS Abraham Lincoln கப்பலில் உள்ள ஆயிரக்கணக்கான வீரர்களின் வருகை, பட்டாயாவின் சுற்றுலா மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு தற்காலிக ஊக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், இந்த வருகையால் உருவாகக்கூடிய சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த போலீசார் கண்காணிப்பை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


