கொட்டாஞ்சேனை 16ஆவது ஒழுங்கையில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், இதுவரை ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் நபரும் அடங்குவதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
அவர் கொட்டாஞ்சேனைப் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
முன்னதாக யாழ்ப்பாணம், மானிப்பாய் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதனிடையே துப்பாக்கிச் சூட்டுக்குச் சந்தேக நபர்கள் பயன்படுத்திய சிற்றூந்தொன்றும், கொழும்பு – ஆமர் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் காவல்துறையால் மீட்கப்பட்டது.
இந்த வாகனத்தில் இருந்து வெடிக்காத நிலையிலிருந்த தோட்டா ஒன்றும் மீட்கப்பட்டது.
இந்தநிலையில், குறித்த சிற்றூந்தை துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு வழங்கிய நபரும் தற்போது காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் கீழே விழுந்த நபர் மீது, சந்தேக நபர்கள் வந்த சிற்றூந்து ஏறிச் சென்ற காட்சி சிசிடிவி கெமராக்களில் பதிவாகியுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர் பல கொலைகள் மற்றும் குற்றச் செயல்களுக்கு உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் என்றும், இந்தக் கொலைச் சம்பவம் இரண்டு குற்றக் குழுக்களுக்கு இடையே நீண்டகாலமாக நிலவி வந்த மோதல் காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என்றும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.


