மியான்மரில் உள்ள சைபர் குற்ற முகாம்களில் மேலும் 13 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
சுற்றுலா விசாவில் அந்நாட்டிற்குச் சென்ற குழுவொன்று மியான்மரின் மியாவடி பகுதியில் அமைந்துள்ள, பயங்கரவாதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள இம்முகாம்களில் சிக்கியுள்ளதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் துஷாரா ரோட்ரிக் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
ஏற்கனவே பல இலங்கையர்கள் இம்முகாம்களில் சிக்கியிருந்த நிலையில், தூதரக தலையீட்டின் மூலம் அவர்களில் சிலரை மீண்டும் நாடு திரும்பச் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
கணினித் துறையில் வேலை பெறும் நோக்கில் வெளிநாடுகளுக்குச் செல்லும் சிலர் சுற்றுலா விசாவை பயன்படுத்தி சென்று பின்னர் கடத்தல் கும்பல்களின் கையில் சிக்கிக்கொள்வதாக வெளிவிவகார அமைச்சு எச்சரித்துள்ளது.


