Wednesday, March 18, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்ஹூஸ்டன் தமிழ் இருக்கை - சிறப்பாக செயல்பட முதல்-அமைச்சர் வாழ்த்து

ஹூஸ்டன் தமிழ் இருக்கை – சிறப்பாக செயல்பட முதல்-அமைச்சர் வாழ்த்து

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

அமெரிக்காவின் நான்காவது பெருநகரமான ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும் தமிழ்மொழி ஆராய்ச்சிக்காக தமிழ் இருக்கை நிறுவிட தமிழ்நாடு அரசு இதுவரை 3,44,41,750(ரூபாய் மூன்று கோடியே நாற்பத்து நான்கு இலட்சத்து நாற்பத்து ஓராயிரத்து எழுநூற்று ஐம்பது மட்டும்) வழங்கியுள்ளது.

மேலும் தமிழ்நாடு அரசு மாபெரும் கொடையாளராக மிளிரும் என்பதைக் கருத்திற்கொண்டு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1,50,00,000(ரூபாய் ஒரு கோடியே ஐம்பது இலட்சம்) வழங்கப்பட்டதோடு, தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களால் வழங்கப்பட்ட வாழ்த்துரைச் செய்தியாக ,

“தமிழின் தொன்மையும், செறிவும், வளமும் நம் அனைவரையும் என்றும் பெருமிதம் கொள்ளச் செய்யும். அதே சமயம், தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டே வருவதால் நம் தமிழ்மொழி என்றும் புதுமையுடன் திகழ்கிறது என்பதிலும் நாம் பெருமையடைகிறோம். அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் அமைந்துள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வுகள் இருக்கையை நிறுவிட சீரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை அறிந்து மகிழ்கிறேன்.

தமிழ்ப் பண்பாட்டின் குன்றாத வளமையைப் பாரெங்கும் பறைச்சாற்றுவதிலும், எதிர்கால தலைமுறையினரை ஊக்கப்படுத்துவதிலும், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் தமிழர்களின் வர்த்தகம், பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்துவதிலும் ஹூஸ்டன் தமிழாய்வுகள் இருக்கை சிறப்பான பங்காற்றும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

கடல்கடந்தும் தமிழால் இணைந்து வாழ்ந்துவரும் அனைத்துத் தமிழ் நெஞ்சங்களுக்கு என் இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்ற வாழ்த்துச் செய்தி 12.12.24 வியாழக்கிழமையன்று பிற்பகல் 2.00 மணியளவில் அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வுகள் இருக்கை சார்பாக நடைபெற்ற விழாவில் படிக்கப்பட்டது.என தெரிவிக்கப்பட்டுள்ளது .

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments